
அக்கரைப்பற்று பகுதியில் வீதி விபத்து தொடர்பான விசாரணையைச் சாதகமாக முடித்துக் கொடுப்பதற்காக இலஞ்சம் பெற்ற போக்குவரத்து பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் சார்ஜண்ட் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றைத் தீர்த்து வைப்பதற்காக, பாதிக்கப்பட்ட தரப்பிடம் அவர் 4,000 ரூபாவை இலஞ்சமாகக் கோரியுள்ளார்.
இது குறித்து இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலையடுத்து, அதிகாரிகள் விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
அதற்கமைய, இன்று வியாழக்கிழமை (26) காலை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் இலஞ்ச மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினர் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, குறித்த நபரால் இலஞ்சம் பொலிஸ் அதிகாரியிடம் கையளிக்கப்பட்ட போது, அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.



.webp)
.webp)







