மட்டக்களப்பில் விவசாயிகளுக்கு அரசின் உரமானியத்தை சீராக விநியோகிக்க உரச் செயலகம் துரித நடவடிக்கை !


புதிய அரசாங்கத்தின் உரமானிய கொள்கை திட்டத்திற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020 சிறுபோகத்தின் சிறுபோக பயிர்ச்செய்கையின் போது பயன்படுத்தவிருக்கும் மானிய உதவியிலான உரவினியோக இலக்கினை பரிசீலிக்கும் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் தேசிய உரச் செயலகத்தின் செயற்பாட்டில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (12) நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்டஅரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தேசிய உரச் செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்டஉதவிப் பணிப்பாளர் கே.எல்.எம். சிராஜீன், கமநல சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் கே. ஜகனாத், விவசாயத் திணைக்களத்தின் மட்டக்களப்புபணிப்பாளர் வை.பி. இக்பால், மட்டக்களப்பு விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.பேரின்ப ராஜா,விவசாயகாப்புறுதிசேவையின் பணிப்பாளர் கே. பாஸ்கரன் உட்படஅரசதிணைக்களங்களின் உயர் அதிகாரிகள் கமநலஅமைப்பின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்தஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் இவ் வருடசிறுபோகத்தில் பெரும் நீர்ப்பாசனத்தின் கீழ் நெற்செய்கை பண்ணப்படவுள்ள 25 ஆயிரத்து எந்நூற்று எழுபத்தெட்டு ஹெக்டெயரிலும், சிறியநீர்ப்பாசத்தின் கீழ் எட்டாயிரத்து முந்நூற்று எண்பத்துநான்கு ஹெக்டெயரிலும் செய்கை பண்ணப்படவுள்ள நெற் செய்கைக்குதேசிய உரச் செயலகத்தினூடாக உர மானியத்தை கோருவதென தீர்மானிக்கப்பட்டது.

இது தவிர உப உணவுப் பயிர்களான மிளகாய், வெங்காயம், உருளைக் கிழங்கு, சோளம், கௌப்பி, பயறு வகைகளை எதிரகாலத்தில் செய்கை பண்ணுவது எனவும் அதற்கான மானிய உரத்தை தேசிய உரச் செயலகத்தில் பெற்றுக் கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இந்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மானிய உர வினியோகத்தை மேலும் இலகுபடுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் பற்றியும் ஏனைய விவசாயிகளின் தேவைகள் பற்றியும் இங்கு ஆராயப்பட்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆராயப்பட்டது.
வழமைபோல ஏனைய மாவட்டங்களுக்கு முன்பாகமட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் விதைப்பு மேற்கொள்ளப்படுவதனால் வழமை போன்று மானிய உரத்தை முன்கூட்டியே உரியகாலத்தினுள் விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு ஏற்பாடுகளை செய்வதாகவும் இதனடிப்படையில் தேவையான இலக்கினைக் கொண்டமானிய உர உத்தேசஅறிக்கையை விரைவாக தேசிய உரச்செயலகத்திற்கு சமர்ப்பிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இங்கு அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கருத்து தெரிவிக்கையில் சிறுபோக நெற்செய்கையின் போது வினைத்திறனான நீர்ப்பாசனத்தைப் பாவிப்பதென்றும் மேட்டு நிலக் காணிகளில் நெல் உற்பத்திக்கு மேலதிகமாக மேட்டு நிலப்பயிர்களை பயிரிடுவதன் மூலம் வினைத்திறனுள்ள நீர்ப்பாசனத்தை பெற்றுக் கொள்வதென்றும் கூடுதலான காணிகளை பயிர்ச் செய்கைகளில் ஈடுபடுமாறும் அரசாங்க அதிபர் விவசாய பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

2019 சிறுபோகத்தில் 18 ஆயிரத்து இருநூற்று தொன்னூற்று மூன்று விவசாயிகளுக்கு 23 098 ஹெக்டெயர் நெல் வயல்களுக்கு மானிய உரம் வழங்கப்பட்டுள்ளதாக இக் கூட்டத்தில் தேசிய உரச்செயலகஉதவிப் பணிப்பாளரினால் அறிக்கைசமர்ப்பிக்கப்பட்டது.