புணாணை முகாமில் இருந்து ஒரு பகுதியினர் வெளியேற்றம்

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் புணாணை மட்டக்களப்பு பல்கலைக்கழகம் மற்றும் மியான்குளம் இராணுவ தடுப்பு முகாம் போன்ற கொரோனா தடுப்பு முகாமில் கடந்த 14 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டவர்கள் எவ்விதமான நோய்த்தொற்றும் இல்லாத நிலையில் தங்களின் குடும்பங்களுடன் இணைக்கும் பணி இன்று (26.03.2020) வியாழக்கிழமை இடம்பெற்றது.

இராணுவத்தினரின் பஸ் மூலமாக புணாணை மட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமில் இருந்து நான்கு பஸ் மூலமாக 125 பேரும், மியான்குளம் இராணுவ தடுப்பு முகாமின் கொரோனா தடுப்பு முகாமில் இருந்து ஒரு பஸ் மூலமாக 18 பேருமாக 143 பேர் இன்று காலை 08.00 மணியளவில் நிட்டம்புவ, கொழும்பு, குருநாகல், காலி, மாத்தறை போன்ற பிரதேசங்களுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் இராணுவத்தினர் அழைத்து சென்றுள்ளனர்.

இதில் கைக்குழந்தைகள், சிறுவர்கள் உட்பட பெரியோர்கள் முதல் தங்களின் குடும்பங்களுடன் இணைக்கும் முகமாக பொலிஸ் பாதுகாப்புடன் இராணுவத்தினரால் அழைத்து சென்றுள்ளனர்

கொரோனா தடுப்பு முகாமில் இருந்து வீடுகளுக்கு செல்லும் மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்-

வெளிநாட்டில் இருந்து வந்த எங்களை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டலில் தடுப்பு முகாம்களில் வைத்து பாதுகாப்பான முறையில் எங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தந்தமைக்காக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவத்தினருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், கொரோனா வைரஸ் இருப்பதாக சந்தேகம் வரும் பட்சத்தில் நாட்டின் நன்மை கருதி தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு சென்று தங்களை நாட்டு மக்களையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றனர்.