இரண்டு வாரங்களுக்குப் பின்னரே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து தீர்மானிக்கப்படும்!



(காரைதீவு நிருபர் சகா)
கொவிட் 19 தொற்று பரவலுக்கு பின்னர் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதியை இன்னும் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களில் அறிவிக்கக் கூடியதாக இருக்குமென்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

66 நாட்களுக்குப் பின்னர் இன்று முழுநாட்டிலும் மீண்டும் வழமையான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதில் எதிர்வரும் ஒரு வாரக் காலப்பகுதியில் சமூகத்தின் செயற்பாடு போக்குவரத்துத் துறையிலான விடயங்கள் முதலான விடயங்கள் ஆராயப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்தார். இதன் அடிப்படையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

பாடசாலை மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது பல கட்டங்களின் கீழ் இடம்பெறும் . முதல் கட்டத்தின் கீழ் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் 43 இலட்சம் பாடசாலை மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். இவர்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர்.இதனால் இவர்களது போக்குவரத்து வசதிகளுக்காக போக்குவரத்து அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தென்கொரியாவில் 4 மாதங்களுக்கு பின்னரே பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டன. பிரிட்டனில் கொவிட் தொற்றுக்கு மத்தியில் ஆரம்ப பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எல்ரீரீயுடனான போரை முடிவுக்கு கொண்டு வந்தது போன்று இதனை நாம் செய்ய முடியாது. கொரோனா வைரசு தொற்று சர்வதேச ரீதியில் பெரும் பிரச்சினையாக இன்று அமைந்துள்ளது. இலங்கையிலும் அது உண்டு.

இந்த விடயங்களை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்த கல்வி அமைச்சர் பாடசாலை மாணவர்களை பாதுகாத்து அதாவது பாடசாலைகளை மூடி கொவிட் 19 தொற்றிற்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்தோம். இதே போன்றே இதனை முடிவிற்கு கொண்டு வந்து நாம் மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்போம் என்பதே எமது நிலைப்பாடு. மாணவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட பின்னரே பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கபடும் என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்தார்.