இலங்கையில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல்- அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் குறைவடைந்து வருகின்றமையினால், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை உரிய முறையில் கவனிக்க வேண்டுமென அந்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், வெளியில் நடமாடும் சமயங்களில் மீண்டும் சந்தேகத்திற்கு இடமான அறிகுறிகள் காணப்பட்டால், அவர்களை மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியுமென தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரையில் 2007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.