தேர்தல் பிரச்சாரத்தினை ஆரம்பித்தார் துரைராசசிங்கம்

பாராளுமன்றத் தேர்தல்களம் சூடுபிடிக்கும் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வேட்பாளர்கள் பலரும் தங்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்து தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கி.துரைராசசிங்கம் அவர்கள் தனது சொந்த ஊரான வந்தாறுமூலையில் நேற்றைய தினம் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.

வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலயத்தில் பூசை வழிபாடுகளுடன் ஆரம்பித்து வந்தாறுமூலை மாரியம்மன் ஆலயம் மற்றும் விஸ்ணு ஆலயம் ஆகியவற்றில் விசேடதரிசனமும் மேற்கொள்ளப்பட்டுப் பிரச்சாரப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணித் தலைவர் லோ.தீபாகரன் உட்பட வந்தாறுமூலைப் பிரதேசத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும், துரைராசசிங்கம் அவர்களினதும் அதிதீவிரப் பற்றாளர்கள் புடைசூழ பிரதேசத்தின் பல பகுதிகளில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டார் வேட்பாளர்.

இதன் போது அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்தத் தேர்தலை தமிழ் மக்கள் உணர்வு பூர்வமாகவும், அறிவு பூர்வமாகவும், ஆக்க பூர்வமாகவும் கருத்தில் எடுத்துத் தற்போது இருக்கின்ற நெருக்கடி நிலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 04 பிரதிநிதிகளைப் பெறக் கூடிய இந்தச் சந்தர்ப்பத்தை மிகக் கவனமாகக் கையாண்டு அவ்வாறு 04 பிரதிநிதிகளைப் பெறும் வகையில் தங்கள் வாக்களிப்பை மிகவும் அர்த்தபுஸ்டியாக வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.