பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பது குறித்த முக்கிய தகவல் வெளியானது!

அனைத்து பல்கலைக்கழகங்களின் 2 ஆம் மற்றும் 3 ஆம் ஆண்டுகளின் கல்வி நடவடிக்கைகள் தொடங்குவதற்கான திகதியை குறித்த பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் தீர்மானிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(06) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும், 11 சுகாதார நிபந்தனைகளுக்கு அமைவாக பல்கலைக்கழகங்களை திறப்பது குறித்து துணை வேந்தர்கள் இன்று முதல் தீர்மானிக்கலாம் எனவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

எனினும் அனைத்து பல்கலைக்கழகங்களின் 1 ஆம் ஆண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடங்குவதற்கான எந்த ஒரு இறுதி முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள் விளையாட்டு, சமூக பணி அல்லது வேறு எந்த கூட்டங்களிலும் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.