அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார் - இரா.சம்பந்தன்

நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 9 ஆசனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்று வெற்றி ஈட்டியதைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் இரா.சம்பந்தன் தலைமையில் விசேட பூசை இடம்பெற்றது. குறித்த வழிபாட்டில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பொன்று அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன்,

"இம்முறை இடம்பெற்ற தேர்தலை ஒரு ஜனநாயக தேர்தலாக நான் கருதவில்லை. மக்களுக்கு பணம் வழங்கி நன்கொடை கொடுத்து மதுபானம் வழங்கி ஆளும் கட்சியினர் ஆசனங்களைப் பெற்றுப்கொண்டுள்ளனர். சிறிய சிறிய தமிழ் கட்சிகள் போட்டியிட்டு தமிழ் வாக்குகளைப் பிரித்துள்ளனர். இதனால் 20 ஆசனங்கள் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கூட்டமைப்பிற்கு ஒன்பது ஆசனங்களே கிடைத்துள்ளது. இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.

மேலும், நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த நீதியும் மற்றும் கெளரவமான பிரஜையாக வாழ தீர்வு வழங்கப்பட வேண்டும். அதில் நாம் உறுதியாக உள்ளோம். ஆனால், ஆட்சி அமைக்கும் அரசாங்கத்தின் நிலைபாட்டைக் கொண்டு எமது இலட்சியத்தை அடைவோம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.