15, 10 வயதுடைய சிறுவர்கள் இருவருக்கு சூடு வைத்த இருவர் விளக்கமறியலில்


(எப்.முபாரக்)
திருகோணமலை தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 மற்றும் 10 வயதுடைய சிறுவர்களுக்கு நெருப்பினால் கையில் சூடு வைத்த இருவரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது இன்று(15) உத்தரவிட்டார்.

பத்தினிபுரம், பாலம்பட்டாறு, தம்பலாகாமம் பகுதியைச் சேர்ந்த 45 மற்றும் 38 வயதுடைய கணவன்,மனைவியே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:
மனைவியின் அக்காவின் இரண்டு 15 மற்றும் 10 வயதுடைய குந்தைகளை வளர்ப்பதற்காக கொடுக்கப்பட்ட நிலையிலே இரண்டு குழந்தைகளுக்கும் கையில் நெருப்பை காய்ச்சி கம்பியினால் சூடு வைத்துள்ளதாக பொலிஸார் குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரனைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமியின் தாய் வெளிநாடு சென்றுள்ள நிலையில் தந்தை வேறு திருமணம் முடித்து வாழ்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களும் மருத்துவ அறிக்கைக்காக கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.