வியாழேந்திரன் மீதான குற்றச்சாட்டு; பொதுஜன முன்னணி மௌனம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் புராதன சின்னங்களை அழித்துவருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனுக்கு எதிராக அம்பிட்டியே சுமனரத்ன தேரர் முன்வைத்திருக்கம் குற்றச்சாட்டுக்கு ஆளும் பொதுஜன முன்னணி மௌனம் கலந்த பதிலை வழங்கியுள்ளது.

மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி சுமரத்தன தேரர், கடந்த வெள்ளிக்கிழமை செங்கலடி பிரதேசத்திலுள்ள விகாரையொன்றின் வளாகத்தில் பதிவிட்டதாகக் கூறப்படும் காணொளி ஒன்றை வெளியிட்டு சர்ச்சயை ஏற்படுத்தியிருந்தார். குறிப்பாக அந்த பகுதியில் இருந்த புராதனச் சின்னங்கள் இயந்திரங்கொண்டு அழிக்கப்பட்டுள்ளதாக வெட்டாந்தரையொன்றை காண்பித்திருந்த சுமனரத்ன தேரர், இதற்குப் பின்னால் மொட்டுக்கட்சி எம்.பி வியாழேந்திரன் இருந்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதுபற்றி பொதுஜன முன்னணியின் தவிசாளரான கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் செய்தியாளர் வினவினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை ஒன்று நடக்கின்றதா என்று எனக்குத் தெரியாது. அவ்வாறு நடந்தால் உரிய முறையில் பக்கச்சார்பு இன்றி தண்டனை வழங்கப்படும் என்று கூறினார்.