தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் சுயநலனுடன் செயற்பட்டு வருகின்றனர்


தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் சுயநலத்துடன் செயற்பட்டு வருகின்றமை காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.



மட்டக்களப்பில் நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 'ஏனைய மாவட்டங்களில் இரண்டிற்கும் மேற்பட்ட மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன.


எனினும், மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் தனி நபர் ஒருவரின் சுயநலம் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.


குறிப்பாக மாட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களின் போது தீர்க்கப்பட வேண்டிய குடிநீர், தொல்பொருள், விவசாயம் உள்ளடங்களாக பிரச்சனைகள் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கின்றது.
தான் வந்துதான் அந்த அபிவிருத்திக் குழு கூட்டத்தினை நடாத்த வேண்டும் என சுயநலத்துடன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் செயற்படுகின்றனர்.


இதன்காரணமாக மட்டக்களப்பு மக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். இதனை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளார்.