மட்டக்களப்பு BRANDIX ஆடைத் தொழிற்சாலை தற்காலிகமாக பூட்டு!


மட்டக்களப்பு- ஆரையம்பதியில்   அமைந்துள்ள BRANDIX ஆடைத்தொழிற்சாலையை தற்காலிகமாக மூன்று நாட்களுக்கு மூடுமாறு கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி மற்றும் மாவடிமுன்மாரியில் கண்டறியப்பட்ட இரு கொரோனோ தொற்றாளர்களின் நெருங்கிய உறவினர்கள் ஆரையம்பதியில் அமைந்துள்ள BRANDIX  ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்துவருவதையடுத்து குறித்த ஆடைத்தொழிற்சாலையை தற்காலிகமாக இன்று முதல் 3 நாட்களுக்கு மூடி கிருமிநாசினி விசிறி சுத்தப்படுத்துமாறு அறிவுரை வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “குறித்த ஆடைத் தொழிற்சாலையில் சுமார் 3 ஆயிரம் பேர் தொழில் புரிந்துவருகின்றனர் இந்த நிலையில் தற்போது மினுவாங் கொடையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோனா தொற்றுதலையடுத்து இந்த ஆடைத்தொழிற்சாலையில் தற்போது ஊழியர்கள் குறைக்கப்பட்டு இங்குள்ள பணியாளர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொண்டு ஆடைத் தொழிற்சாலை இயங்கிவருகின்றது.

இருந்தபோதும் தற்போது களுவாஞ்சிக்குடி மாவடிமுன்மாரியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் இருவருது சகோதரிகள் உறவினர்கள் குறித்த அடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர்.

இதன் காரணமாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பி.சி.ஆர் பிரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் குறித்த ஆடைத் தொழிற்சாலையை தற்காலிகமாக இன்றில் இருந்து மூடி சுகாதார நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொது சுகாதார அதிகாரிகள் ஆடைத்தொழிற்சாலை நிருவாகத்திற்கு அறிவுரை வழங்கியதையடுத்து உடனடியாக ஆடைத்தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது .

இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் அறிக்கைகள் வந்த பின்னர் இது தொடர்பாக தீர்மானம் எடுக்கமுடியும்” என அவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல்  தெரிந்துகொள்ள 
  0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள் 
 உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்