சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 13 சந்தேக நபர்கள் வாகனத்துடன் கைது!



(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புணாணை மைலந்தனை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட பதின்மூன்று சந்தேக நபர்களும், பதின்மூன்று வாகனங்கள் என்பன திங்கட்கிழமை மாலை கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணாணை மைலந்தனை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக வாழைச்சேனை விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப் படையினர் இணைந்து குறித்த இடத்தினை சுற்றிவளைப்பு மேற்கொண்டனர்.

இதன் போது மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பதின் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன்; பத்து உழவு இயந்திரங்கள் மற்றும் மூன்று  கனரக வாகனங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது. 

அத்தோடு நீண்ட காலங்களுக்கு பிறகு அதிக வாகனங்கள் மற்றும் அதிக சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் சட்டவிரோத மரம் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.