திருகோணமலை மாவட்ட கொவிட் செயலணி கூட்டம்!



(எப்.முபாரக்)
திருகோணமலை மாவட்ட கொவிட் செயலணி கூட்டம் இன்று(25) அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்டத்தில் தற்போது கொவிட் பரவலின் நிலை மற்றும் கொவிட் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றி இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

மக்கள் தமது செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது கட்டாயம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றல் வேண்டும். சில பிரதேசங்களில் மக்கள் முகக்கவசம் இன்றி நடமாடுவது தம்மால் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் வைரஸ் இன்னொருவருக்கு பரவ அதிக வாய்ப்புள்ளதால் மக்கள் முகக் கவசம் அணிதல் , சமூக இடைவெளி பேணல், கைகளை கழுவல் போன்றவைகளை கரிசனைகொண்டு பேணுமாறு அரசாங்க அதிபர் மக்களிடம் வேண்டிக் கொண்டார்.

மாவட்டத்தில் எழுமாறாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கொவிட் தொற்றாளர்களோடு தொடர்புடையவர்கள் வீட்டிலே சுயதனிமைப்படுத்தப்பட்டு சில தினங்களுக்கு பின்னர் அவர்கள் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது மாவட்ட தொற்று நோயியல் பிரிவின் வைத்திய அதிகாரி டொக்டர் தங்கவேல் நிலோஜன் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எம். ஏ.அனஸ்,முப்படை மற்றும் பொலிஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.