கல்லடியில் பூப்பறித்துக் கொண்டிருந்த பெண்ணின் தங்கச் சங்கிலி கொள்ளை!


மட்டக்களப்பு கல்லடி பகுதியிலுள்ள பூமரத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவன் கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

வயோதிபப் பெண் சம்பவதினம் காலை 7மணியளவில் தனது வீட்டின் அருகாமையில் உள்ள வீதியோரத்தில் இருந்த பூமரத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்தார்.

இந் நிலையில் திடீரென மோட்டர் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவன் அவரின் கழுத்தில் இருந்த ஒன்றரைப் பவுண் தங்க சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளான். இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீசிரிவீ கமரா மூலம் மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை கண்டறிந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான இறக்காமத்தைச் சேர்ந்தவரிடம் மேற்கொண்ட  விசாரணையில் இவர் அதனை விற்று நீண்டகாலம் என தெரியவந்ததையடுத்து, அந்த மோட்டர் சைக்கிள் 4 பேர் வாங்கி விற்றுள்ளதாகவும், கடைசியாக வாங்கியவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் திருட்டுப் போயுள்ளதாகவும் இந்த திருட்டுப்போன மோட்டர் சைக்கிளின் இலக்கத்தை வேறு மோட்டர் சைக்கிளுக்கு மாற்றி இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.