பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர், வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானில் நூற்றுக்கும் மேலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த 40 வயதான பிரியந்த குமார தியவடன என்ற நபர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவடன கனேமுல்ல நகரின் அருகே உள்ள கெந்தலியத்த பகுதியைச் சேர்ந்தவர். பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட பட்டதாரியான இவர், 2010ம் ஆண்டு முதல் பாகிஸ்தானிலுள் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றார் என்று பிபிசி தமிழ் உறுதிப்படுத்தியுள்ளது.
The horrific attack and murder of Priyantha Kumara in Sialkot pakistan by religious extremism ! Shame on #pakistan #Sialkot #PriyanthaKumara #LKA pic.twitter.com/MwiRtYkliJ
— Dr.Sayanolipavan Ramakrishnan (@saisayan) December 4, 2021
பிரியந்த குமார தியவடனவின் கொலை தொடர்பாக முக்கியக் குற்றவாளிகள் உள்பட நூற்றுக்கும் மேலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
சிசிடிவி காணொளிகளை வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் தேடப்பட்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுதல் மற்றும் பிற குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சியால்கோட் நகரில் வாசிராபாத் சாலையில் இலங்கையர் தாக்கி, எரிக்கப்படும் நிகழ்வைக் காட்டுவதாகக் கூறி பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
பிரியந்த குமார தியவடன எரிக்கப்பட்டது ஏன்?
சியால்கோட் நகரிலுள்ள தனியார் ஏற்றுமதி தொழிற்சாலையொன்றில் பிரியந்த குமார தியவடன மேலாளராக கடமையாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் இஸ்லாமுக்கு எதிராக மத நிந்தனையில் ஈடுபட்டதாக வெள்ளிக்கிழமை காலை தகவல் பரவியது."தொழிற்சாலையில் இந்தத் தகவல் பரவியதும் ஏராளமான ஊழியர்கள் தொழிற்சாலை முன்பு, திரண்டு போராட்டம் நடத்தினர். பின்னர் பிரியந்த குமார தியவடனவை உடல் ரீதியான துன்புறுதலுக்கு உள்ளாக்கி எரித்துக் கொன்றனர்," என்று சம்பவத்தை நேரில் பார்த்த முகமது பஷீர் என்பவர் கூறியுள்ளார்.
நூற்றுக் கணக்கானோர் ஒன்று திரண்டிருந்தநேரத்தில், இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 11.35 மணியளவில் மீட்புதவி துறையினருக்கு இந்த நிகழ்வு தொடர்பாக தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அவர்கள் அங்கு செல்லும் முன்னரே பிரியந்த குமார தியவடன எரித்துக் கொல்லப்பட்டுள்ளார் என்று காவல்துறை கூறுகிறது.