(காரைதீவு சகா)
வரலாற்றுப் பிரசித்திபெற்ற மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தை நோக்கி அண்மைக்காலமாக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது
அவ்வாலயத்தின் மகாகும்பாபிசேகம் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள இந்நாட்களில் அங்கு இடம்பெற்ற அற்புதநிகழ்வினால் ஈர்க்கப்பட்ட பக்தர்கள் அங்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். அங்கு நிலவிய சர்ச்சையைத் தீர்த்துவைத்த அந்த அற்புத நிகழ்வுக்குரிய ஆலயமணியைக் காண்பதில் பக்தர்கள் கரிசனை காட்டுகின்றனர்.
வெள்ளி, பௌர்ணமி மற்றும் விசேட தினங்களில் அங்கு விஷேட பூஜை நடைபெறுவது வழக்கம்.
நேற்றுமுன்தினம் பௌர்ணமி தினத்தில் மாவட்டத்தின் பல பாகங்களிலுமிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் அங்கு வருகைதந்திருந்தார்கள்.
நாகபாம்பிற்கு பால் வார்க்கும் சமயசடங்கு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. கூடவே பலபொங்கல் நிகழ்வுகளும் அன்னதான நிகழ்வுகளும் நேர்த்திகளும் இடம்பெற்றிருந்தன.
அங்கு ஆலயத்தலைவர் கி.ஜெயசிறில் கும்பாபிசேகம் தொடர்பான விளக்கத்தையும் ,நிதியின் அவசியத்தையும் எடுத்துரைக்க உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா நற்சிந்தனை வழங்கினார்.
பக்தர்கள் அனைவரும் அன்னதானத்தில் பங்கேற்று மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.