காணாமல் போன சிறுமி மீட்பு

அம்பாறை, கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள், சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்கியிருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) காணாமல்போன 16 வயதுச் சிறுமி, நேற்றிரவு (30) கல்முனை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி பலரால் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு, வழக்கு விசாரணையின் பின்னர் பாதுகாப்புக்காக நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் பெண்கள், சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் ஒரு வருடமாக தங்கவைக்கப்பட்டிருந்தார்.

கல்முனை பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின் போது, மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பகுதியில் வைத்து குறித்த சிறுமியை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுமி, கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் உரிய தரப்பினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

சிறுமி தனது வாக்குமூலத்தில் தனது விருப்பத்தின் பேரில் குறித்த காப்பகத்தில் இருந்து தப்பி சென்றதாக குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.