விபுலானந்தாவில் பிறந்த நாள் பொன் விழா.

(காரைதீவு நிருபர் சகா )

காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் 1988, 1991 காலப் பகுதியில் கபொத. சா.த மற்றும் உ.தரம் பயின்ற மாணவர்களின் பிறந்தநாள் பொன் விழா நிகழ்வு நேற்று முன்தினம் காரைதீவில் நடைபெற்றது .

காரைதீவு விபுலானந்த கலாச்சார மண்டபத்தில் பொன் விழாக் குழுத் தலைவர் எல்.ஏ.ராஜேந்திரகுமார் தலைமையில் பொன்விழா நடைபெற்றது .

விழாவில் சிறப்பம்சமாக இந்த அணியினருக்கு கற்பித்த ஆசிரியர்கள் 24 பேரும் அதிதிகளாக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.

ஆசிரியர்களை முன்னிலைப்படுத்தி அவர்களுக்கு மாலைசூட்டி, நினைவு பரிசு வழங்கி கௌரவித்திருந்தமை பலரையும் ஈர்த்திருந்தது.

மேலும், முன்னாள் ஆசிரியர் அமரர் நல்லதம்பி மனோகரன் ஆரம்பித்த 'விபுலானந்த நற்சேவை ஒன்றிய" சேவை மற்றும் கல்லூரி காலம் பற்றிய காணொளி காண்பிக்கபட்டது.

50 வது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டிக் கொண்டாடியது.

வரவேற்புரையை, 50 வது பிறந்த நாளை கொண்டாடும் கிழக்கு மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் பொறியியலாளர் நடராஜா சிவலிங்கம் நடத்தினார்.

அங்கு வீணாகானம் ,பரதநாட்டியம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

"ஞாபகம் இருக்கின்றதா நண்பர்களே." என்ற வினா விடை நிகழ்ச்சி பலரையும் ஈர்த்திருந்தது. ஆசிரியர் கௌரவிப்பு இடம் பெற்றது .

நிகழ்ச்சி அனைத்தையும் 50 வது பிறந்த நாளை கொண்டாடும் காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபதி கலாநிதி தவநாயகம் மதிவேந்தன் ஆகியோர் நடத்தினர்..

பல வரலாற்றுச் சான்றுகள் பொதிந்த "காலத்தின் ஏடு" என்ற மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது . அமரர் ந.மனோகரன் அவர்களின் சகோதரர் முன்னாள் ஆசிரியர் ந.தியாகராஜா மலரை வெளியிட்டு வைத்தார்.
மலர்ஆசிரியர் சிவ .ஜெகராஜன் மலர் வெளியீட்டுரையை நிகழ்த்தினார்.

மேலும் , பொன்விழா காணும் நண்பர்களின் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

அதன் பின்பு ,ஆசிரியர்களின் கருத்துரையிலே முன்னாள் ஆசிரியர்களான ஆர். சண்முகநாதன், வே.தங்கவேல் , வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கருத்து வழங்கினார்கள்.

ஆடல் ,பாடல் மற்றும் மதியபோசனத்துடன் விழா நிறைவுற்றது.