எரிவாயுவின் விலை குறைக்கப்படும் , எதிர்காலத்தில் வரிசைகள் உருவாகாது - லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் !



எரிவாயுவின் விலை இன்று முதல் குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

நிதியமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்று எரிவாயு விலை குறைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் வரிசைகள் உருவாகாது என்பதை உறுதிப்படுத்த போதுமான அளவு எரிவாயு கையிருப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். உலகச் சந்தையில் எரிவாயுவின் விலை குறைவதால் ஏற்படும் நன்மைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதே விலை சூத்திரத்தின் சாதகமான அம்சமாகும்.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு அனைவருக்கும் போதுமான விநியோகத்தை உறுதி செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கான இறக்குமதி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார். எனினும் சீரற்ற காலநிலை ஏற்பட்டால், இறக்குமதிகளை பெறும் போது ஓரிரு நாட்கள் தாமதம் ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.