சாணக்கியனின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு விவசாய அமைப்புக்கள் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் !

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது.

கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) காலை இந்த கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.

உரப்பற்றாக்குறை காரணமாக நெற்நெய்கையில் ஈடுபடும் விவசாயிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

அத்துடன், நெற்செய்கைக்கு தேவையான உரத்தினை அரசாங்கம் வழங்கும் வரையில், நெற்செய்கையில் ஈடுபடப்போவதில்லை எனவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதுதொடர்பில் இதற்கு முன்னரும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், இரா.சாணக்கியனை மட்டக்களப்பில் சந்தித்து பேசியிருந்தனர்.

இதன்போது இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியினை சந்தித்து கலந்துரையாடுவது தொடர்பாகவும் பேசப்பட்டிருந்தது. எனினும் ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு சென்றிருந்தமை காரணமாக அவரை சந்தித்து கலந்துரையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்று நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் பங்கேற்கவுள்ளனர்.

குறித்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு உர விவகாரத்துடன் தொடர்புள்ள அனைத்து தரப்பினருக்கும் அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக கொழும்பிற்கு அவர்கள் வருகை தந்துள்ள நிலையிலேயே, இன்றைய தினம் கொழும்பில் இந்த விடயம் தொடர்பில் இரா.சாணக்கியனை அவர்கள் சந்தித்து பேசியுள்ளனர்.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என அவர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக விவசாய அமைச்சர் தங்களிடம் தெரிவித்த கருத்துக்களில் தங்களுக்கு நம்பிக்கையில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மழையினை நம்பி ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ஏக்கரிலும், 80 ஆயிரம் ஏக்கர் நீர்பாசனங்களையும் நம்பி தாங்கள் விவசாயத்தில் ஈடுபடுவதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இரா.சாணக்கியனின் பிறந்தநாளினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கேக் ஒன்றினையும் வெட்டியிருந்தனர்.

இதேவேளை, இன்று நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் கலந்துரையாடலிலும், மாலை எதிர்கட்சி தலைவர் காரியாலயத்தில் நடைபெறும் கலந்துரையாடலிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.