ஒலுவில் துறைமுகத்தில் தனியார் தொழிற்சாலைக்கு இடமளிக்க வேண்டாம் : மு.கா. தலைவர் ஹக்கீம் கோரிக்கை !



(ஏ.எம்.ஆஷிப்)
மீன்பிடித் துறைமுகமாக மாற்றப்பட்டுள்ள ஒலுவில் துறைமுகத்தில் தனியாருக்கு தொழிற்சாலை அமைப்பதற்கு இடம் வழங்கப்பட்டிருப்பதை ஆட்சேபித்துள்ளோம். இம்முடிவை மீளாய்வு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

02 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஒலுவில் பொது நூலக கட்டடத் திறப்பு விழா சனிக்கிழமை (17) இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.அமானுல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் கூறியதாவது;

அம்பாறை மாவட்டத்தில் மூன்று சமூகங்களும் ஒற்றுமையாக வாழந்து வருகின்றனர். ஆனால் சில இனவாதிகள் இன முறுகல்களை ஏற்படுத்துவதற்கு எத்தனித்து வருகின்றார்கள். இதனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முறியடித்து, சுமூகமான நிலையை ஏற்படுத்தி வருகின்றது.

ஒலுவில் துறைமுக நிர்மாணிப்பினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அவசரத் தீர்வு காணுமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

அதேவேளை ஒலுவில் துறைமுகத்தை துறைமுக அதிகார சபையினர் மீன்பிடித் துறைமுகமாக மாற்றி, மீன்பிடித் துறைமுக திணைக்களத்துக்கு ஒப்படைத்துள்ளனர். இதில் தனியாருக்கு தொழிற்சாலை அமைப்பதற்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இதனை மீளாய்வு செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முஸ்தீபுகளை மேற்கொண்டு வருகின்றது. இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீளாய்வு செய்ய வேண்டுமென அவரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறோம்- என்றும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் இந்திய முற்போக்கு கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன், கல்முனை மாநகர மேயர் ஏ.எம்.றகீப், முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கண்டனர்.