ஏறாவூர் இ.போ.ச டிப்போவினால் தூர இடங்களுக்கான பஸ் சேவைகள் !


( வி.ரி சகாதேவராஜா)
மட்டக்களப்பு பிரதேசத்தில் இருந்து கொழும்பு செல்கின்ற பயணிகளின் நீண்ட கால கோரிக்கையையடுத்து, இலங்கை போக்குவரத்து சபையின் ஏறாவூர் பஸ் டிப்போவினால் புதிய பஸ் சேவையொன்று அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டிப்போ முகாமையாளர் மொஹமட் ஸெய்னி தெரிவித்தார்.

மேற்படி இ.போ.ச பஸ் தினமும் காத்தான்குடியில் இருந்து இரவு 10 மணிக்கு கொழும்பை நோக்கி புறப்படுகின்றது. அதே பஸ் மறுநாள் இரவு 7 மணிக்கு கொழும்பு பிரதான பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கல்முனை வரை செல்கின்றது. இந்த இரவு நேர பஸ் சேவையினால் மிகுந்த நன்மையடைவதாக பயணிகள் பலர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இ.போ.சவின் ஏறாவூர் டிப்போவினால் தூர இடங்களுக்கான மேலும் பல பஸ் சேவைகள் நடத்தப்பட்டு வருவதாக முகாமையாளர் மொஹமட் ஸெய்னி தெரிவித்தார்.

ஏறாவூரில் இருந்து தினமும் அதிகாலை 5.15 இற்கு கொழும்புக்கான சேவை நடத்தப்படுகின்றது. அந்த பஸ் இரவு 11 மணிக்கு கொழும்பு பஸ்நிலையத்திலிருந்து காத்தான்குடிக்குப் புறப்படுகின்றது.

ஏறாவூரில் இருந்து அதிகாலை 4.15 இற்கு வவுனியாவுக்கான பஸ் சேவை நடத்தப்படுகின்றது. வவுனியாவில் இருந்து காலை 11 மணிக்கு கல்முனை வரையான சேவை நடைபெறுகின்றது.

ஏறாவூரில் இருந்து தினமும் காலை 6.15 இற்கு புத்தளத்துக்கான சேவை நடைபெறுகின்றது. அந்த பஸ் மறுநாள் காலை 7 மணிக்கு புத்தளத்திலிருந்து புறப்படும்.

காத்தான்குடியிலிருந்து காலை 7 மணிக்கு கட்டுநாயக்கவுக்கான பஸ் சேவை நடைபெறுகிறது. கட்டுநாயக்கவிலிருந்து காலை 8 மணிக்கு கல்முனை நோக்கி அந்த பஸ் புறப்படுகிறது. அதேவேளை கல்முனையில் இருந்து காலை 9 மணிக்கு கட்டுநாயக்கவுக்கான பஸ் சேவையையும் ஏறாவூர் டிப்போ நடத்துகின்றது.


ஆசனப்பதிவுகளை ஒன்லைன் ஊடாக மேற்கொள்ள முடியுமெனவும் முகாமையாளர் தெரிவித்தார்.