தேசிய விஞ்ஞான நிறுவனத்தினால் பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம், தேசிய பாடசாலைக்கு இவ்வாண்டு மூன்று தேசிய விருது

 (சித்தா)

தேசிய விஞ்ஞான நிறுவனத்தினால் (National Science Foundation – NSF)  நடாத்தப்பட்ட இவ்வாண்டுக்குரிய (2022) விருது வழங்கல் விழாவில் மட்/பட்/பட்டிருப்பு ம.ம.வி தேசிய பாடசாலை மூன்று விருதுகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. இவ் ஆண்டுக்குரிய தேசிய விருது பெற்ற பாடசாலைகளில் ஒரேயொரு தமிழ் பாடசாலை மட்/பட்/பட்டிருப்பு ம.ம.வி தேசிய பாடசாலை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
முதலாவது விருதாக தேசிய விஞ்ஞானக் கழகத்தினால் வருடா வருடம் நிகழ்த்தப்பட்டு வருகின்ற ஆராய்ச்சிப் போட்டியில் மட்/பட்/பட்டிருப்பு ம.ம.வி தேசிய பாடசாலையைச் சேர்ந்த விஞ்ஞானப் பிரிவில் கல்வி பயில்கின்ற மாணவர்கள் மூன்று தலைப்பின் கீழ் ஆராய்ச்சிகளை நிகழ்த்தி இருந்தனர். இவற்றில் மாற்றியமைக்கப்பட்ட களிமண் நனோத் துணிக்கைகளைப் பயன்படுத்தி அசுத்த நீரிலுள்ள புளோரைட்டு அயனை அகற்றுதல் (Removal of Fluoride ion from Waste water using modified Nano particles) எனும் தலைப்பில் இரசாயனவியல் பாட ஆசிரியர் திரு.செ.தேவகுமார் அவர்களின் வழிகாட்டலின் கீழ் பிரபாகரன் கோவர்த்தனன், தில்லைவாசன் மனோஜ்கரன், மேகராசா ரதுகேஷ் ஆகிய மாணவர்களால் செய்யப்பட்ட ஆராய்ச்சி முதல் 10 இடங்களுக்குள் (Top Ten Winners)  தெரிவு செய்யப்பட்டு தேசிய ரீதியில் சாதனை மைல் கல்லை நிலைநாட்டியுள்ளது. குறித்த பாடசாலை தொடர்ச்சியாக மூன்று வருடங்களாக இச்சாதனையை நிகழ்த்திக் கொண்டு வருவது பாராட்டத்தக்க அம்சமாகும்.
இரண்டாவது விருதாக இவ் ஆண்டுக்குரிய சிறந்த விஞ்ஞானக் கழகம் (Best Science Society – 2022) எனும் விருதினையும் இப் பாடசாலை பெற்றுக் கொண்டுள்ளது. இவ்விருதும் கூட தொடர்ச்சியாக மூன்று வருடங்களாக குறித்த பாடசாலை பெற்று வருகின்றது.
மூன்றாவது விருதாக இவ் ஆண்டுக்குரிய சிறந்த விஞ்ஞான மேம்பாட்டு ஆசிரியர் தேசிய விருது (Best Science Promoting Teacher National Award) மட்/பட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையைச் சேர்ந்த இரசாயனவியல் பாட ஆசிரியர் திரு.செ.தேவகுமார் அவர்களுக்கு இன்று 10.11.2022 கல்வி அமைச்சு, இசுருபாய, பத்தரமுல்லயில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.