பாடசாலை ஆசிரியர் மீது தாக்குதலை மேற்கொண்டவர் பொலிஸில் சரண் !



யாழில் உள்ள பாடசாலையொன்றின் உடற்பயிற்சி ஆசிரியரை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த குறித்த பாடசாலையில் கல்விபயிலும் மாணவனின் தந்தை புதன்கிழமை (23) யாழ். பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

குறித்த பாடசாலைக்குள் செவ்வாய்க்கிழமை (22) அத்துமீறி நுழைந்து ஆசிரியர் மீது தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்ததுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து இருந்தனர்.

இந்நிலையில் புதன்கிழமை சந்தேகநபர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்துள்ளார். அதேவேளை, சந்தேக நபரை கைது செய்யவேண்டும் எனத் தெரிவித்து பாடசாலையின் ஆசிரியர்கள் நேற்றையதினம் கற்பித்தல் செயற்பாடுகளை புறக்கணித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.