மட்டக்களப்பில் ஜஸ் போதை பொருளுடன் கையடக்க தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர் உட்பட இருவர் கைது !

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள புதூர் மற்றும் கருவப்பங்கேணி பிரதேசத்தில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர் உட்பட இரு வியாபாரிகளை 5 கிராம் 450 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன்; நேற்று செவ்வாய்க்கிழமை (24) இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சுற்றுச் சூழல் மற்றும் போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் சப் இன்பெக்ஸ்டர் ரி.கிருபாகரன் உட்பட்ட பொலிஸ் குழுவினர் சம்பவதினமான நேற்று இரவு புதூரில் போதைபொருள் வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டபோது போதை வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரை 150 மில்லிக்கிராம் ஜஸ்போதை பொருளுடன் கைது செய்தனர்.

அதேவேளை கருவப்பங்கேணி பிரதேசத்தில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தினை நடாத்திவரும் உரிமையாளரின் வீட்டை முற்றுகையிட்ட பொலிசார் அங்கு வியாபாரத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளரை 5கிராம் 300 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்தனர்

இவ்வாறு வௌ;வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட இருவரும் நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் இளைஞர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.