இரத்தினபுரியிலிருந்து பாணந்துறை நோக்கி பயணிகளுடன் சென்ற பஸ் தீப்பிடித்து எரிந்தது!


ஹொரணை - இரத்தினபுரி வீதியில் பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்துக்கு  முன்பாக தனியார் பஸ்  ஒன்று இன்று (21) தீப்பற்றி எரிந்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரத்தினபுரியிலிருந்து பாணந்துறை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஹொரணை பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்துக்கு  முன்பாக உள்ள பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் பயணத்தை ஆரம்பித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அப்போது பஸ்ஸில் நாற்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் காணப்பட்டனர். இருப்பினும் இந்தச் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

ஹொரணை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைத்தனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.