இரு குடும்பங்களுக்கு இடையில் மோதல் : ஒருவர் பலி!

மன்னார் சாந்திபுரம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றை தொடர்ந்து இடம்பெற்ற கொடூரமாகத் தாக்குதலில் எமில் நகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் ஐவர் காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

நீண்டகாலமாக சாந்திபுரம் பகுதியில் இரு குடும்பத்திற்கு இடையில் நிலவி வந்த பிரச்சினை பொலிஸ் நிலையம் வரை சென்று சமாதனப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (9) இரவு குறித்த இரு குடும்பத்திற்கு இடையில்  மீண்டும் பிரச்சினை இடம் பெற்ற நிலையில் முரண்பாடு முற்றியுள்ளது.

இந்நிலையில்  பலர் இணைந்து கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்திய நிலையில் எமில் நகர் பகுதியைச் சேர்ந்த 34 வயதான சத்தியா என்ற நபர் மரணமடைந்துள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த பெண் ஒருவர் உட்பட  ஐவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொலை தொடர்பில் சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.