மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் பிரிவுகளான மட்டு தலைமையக பொலிஸ்,மற்றும் வவுணதீவு பொலிஸ்பிரிவுகளில் கடந்த இருதினங்களில் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த (03) பிள்ளைகளின் தந்தையான ஹன்றி இரத்தினராசா கிளமன்ட் ரஜீவ்காந்த் (41) என்பவர் மற்றும் விளாவெட்டுவான் நாவற்காடு பிரதேசத்தைச்சேர்ந்த வினாயமூர்த்தி சசுதன் (23) என்பவர்களே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர்களாவார்.
மட்டக்களப்பு தனியார் வைத்தியசாலையின் கணக்காளராக பணிபுரிந்த (03) பிள்ளைகளின் தந்தையானவர் தனது மனைவியுடனான தகராறினால் தனது வீட்டின் அறையினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் வவுணதீவு பொலிஸ்பிரிவை சேர்ந்த தாய் தந்தையின் பராமரிப்பில் வாழ்ந்து வந்த நிலையில் சம்பவ தினத்தன்று தனது கையடக்க தொலைபேசியை தவறவிட்டதனால் வீட்டுக்கு வந்து வீட்டின் அறையினுள் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்தபோது தூக்கில் இருந்து மீட்டெடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு நீதிமன்ற பதில் நீதிவான் வி.தியாகேஸ்வரன் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடங்களுக்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் மற்றும் காத்தான்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வேலு மணிமாறன் ஆகியோர் சடலங்களை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு மற்றும் வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.