பாதுகாப்பு தரப்பினரால் எமது உரிமை மீறப்பட்டுள்ளது : அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

மே 09 சம்பவம் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் பாதுகாப்பு அறிக்கை சமர்ப்பித்தும் நாட்டின் சட்டம்,ஒழுங்கை பாதுகாப்பு தரப்பினர் உறுதிப்படுத்தவில்லை. இதனால் எங்களின் மனித உரிமை மீறப்பட்டுள்ளது.தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் நேற்று முறைப்பாடளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டில் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்த பின்னணியில் பல நெருக்கடிகளை எதிர்கொண்ட மக்கள் காலிமுகத்திடல் களத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஜனநாயகமாக தோற்றம் பெற்ற போராட்டத்தை அரசியல்வாதிகள் ஆக்கிரமித்து பயங்கரவாத போராட்டமாக மாற்றியமைத்தார்கள்.

காலி முகத்திடல் போராட்டக்களத்தின் செயற்பாடுகள் மே 09 ஆம் திகதி (2022.05.09) பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என புலனாய்வு பிரிவினர் முன்கூட்டியதாக பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவுறுத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள்.

புலனாய்வு தரப்பினரது அறிவுறுத்தலை பாதுகாப்பு தரப்பினர் கவனத்தில் கொள்ளவில்லை.இதனால் மே 09 ஆம் திகதி ஆளும் தரப்பின் அரசியல்வாதிகள் பாரிய விளைவுகளை எதிர்கொண்டார்கள்.பாதுகாப்பு தரப்பினர் குறைந்தபட்ச அதிகாரத்தை கூட பயன்படுத்தவில்லை.பாதுகாப்பு தரப்பினரது அலட்சியத்தால் எமது மனித உரிமைகள் மீறப்பட்டள்ளன.இது குறித்து விசாரணை முன்னெடுக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளோம்.

காலி முகத்திடல் போராட்டக்களத்தில் விபச்சாரிகள்,போதைப்பொருள் வியாபாரிகள்,பாதாள குழு செயற்பாட்டாளர்கள்,சமூக விரோதிகள் முன்னிலை வகித்தார்கள் என நாங்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்ட போது எம்மை விமர்சித்தார்கள்.ஆனால் நாங்கள் குறிப்பிட்டது உண்மை என்பதை மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

சமூக போராட்டம் தோல்வியடைந்த பின்னணியில் மத போராட்டத்தை ஒருதரப்பினர் முன்னெடுத்துள்ளார்கள்.மீண்டும் போராட்டத்தை ஒன்றுத்திரட்டுவதாக அரசியல் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.நாட்டு மக்கள் இனி போராட்டத்தில் ஈடுபடமாட்டர்கள்.

மக்கள் போராட்டம் என்று குறிப்பிட்டுக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் உண்மை நோக்கம் என்னவென்பதை மக்கள் நன்கு அறிந்துக் கொண்டுள்ளார்கள் என்றார்.