மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா காலமானார் ! இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும்


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உப தலைவருமான பொன்.செல்வராசா இன்று காலமானார்.

1994ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில், தேர்தலில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினராக இவர் தெரிவானர்.

2000ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நிமலன் சௌந்தரநாயகம் படுகொலை செய்யப்பட்ட பின்னர், பொன்.செல்வராசா அவரது வெற்றிடத்திற்கு நியமன நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

2010ம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடாக தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

மரணிக்கும் வரை தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவராகவும், மத்தியகுழு, அரசியல் குழு உறுப்பினராகவும் பொன்.செல்வராசா செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 15.10.2023ம் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்று பி.ப 04.00மணியளவில் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயான மின்தகன சாலையில் தகனம் செய்யப்படும்.