நீண்ட நாட்களாக இருந்த அம்பிளாந்துறை, தாமரைப்பூ சந்தி பொலிஸ் காவலரண் அகற்றப்பட்டது

(கிருஸ்ணா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீண்ட நாட்களாக இருந்த அம்பிளாந்துறை, தாமரைப்பூ சந்தி பொலிஸ் காவலரண் அகற்றப்பட்டுள்ளதுடன் அவை பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டுக்கு முன்னர் இப்பகுதி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாக இருந்ததுடன் அவை மீட்கப்பட்ட பின்னர் படையினரின் படை முகாமாக செயற்பட்டுவந்தது.

பின்னர் இலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் அவற்றில் இருந்து படையினர் வெளியேறிய நிலையில் அவற்றை பொலிஸார் பொறுப்பேற்றனர்.

இந்த நிலையில் கடந்த காலத்தில் குறித்த காவலரண் அமைக்கப்பட்டுள்ள வீடுகளின் உரிமையாளர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் அவற்றை பொலிஸார் பொதுமக்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை காவலரண் அகற்றப்பட்டதன் காரணமாக அப்பகுதியில் குற்றச்செயல்கள் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.