இன்றைய வானிலை முன்னறிவிப்பு


இன்றைய வானிலை (27.12.2014)

நேற்று எதிர்வு கூறப்பட்டதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 123.6 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அயல் பிராந்தியங்கள் எனக் குறிப்பிடப்பட்ட மாவட்டத்தின் எல்லைப்பிரதேசங்களான பதுளையில் 1995.9 மில்லி மீற்றரும், அம்பாறைபொத்துவில் பிரதேசத்தில் 275.8 மில்லி மீற்றரும், பொலநறுவையில் 121.9 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எமது மாவட்டத்துக்குள் கிடைத்த மழைவீழ்ச்சி தவிர எல்லைப் பிரதேசங்களில் கிடைத்த மழை நீரின் ஒரு தொகுதிக்கான வடிச்சல் மட்டக்களப்பு மாவட்டத்துக்கூடாக அமைவதால் எமது கவனம் மட்டக்களப்பு பிரதேச வானிலை நிலைமைகளோடு மட்டுப்படுத்தப்பட்டதாக மட்டுமன்றி  அயல் பிரதேசங்கள் தொடர்பிலும் அவதானமாக இருக்கவேண்டியுள்ளது. அதன் காரணமாகத்தான் மாவட்டத்தின் பல பிரதேசங்களில் சடுதியாக வெள்ள நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது. இவற்றைக் கருத்திற்கொண்டே நேற்றைக்கு முன்தினம் வெள்ளம் வடிவதைக் கண்ட மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்ப முயற்சிக்கலாம் எனக்கருதி மேலும் ஓரிரு நாட்கள் இடைத்தங்கல் முகாம்களில் இருக்க அறிவுறுத்தப்பட்டது.

இருந்தபோதும் இன்றும் மட்டக்களப்புக்கான வளிமண்டல நிலைமையில் சாதகமான மாற்றங்கள் தென்படவிலலை. இன்றும் நாம் பதட்டம் ஏதும் இன்றி இன்றைய இயல்பு வாழ்வையும் எமது இடங்களில் இருந்தவாறே அனுபவிக்க வேண்டியுள்ளமை தவிர்க்க முடியாது. 27.12.2014
/ 00:15Z (இங்கு
“Z” என்பது தற்பொழுது நடைமுறையில் குறிப்பாக செய்மதி தொழில் நுட்பத்தில் கையாளப்படுகின்ற நேர அலகு
GMT, UTC ஆகியவற்றுக்குப் பதிலாக பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு
‘Zulu Time’ என்று பெயர். கல்பனா -1 செய்மதித் தகவல்களில் நேரம்
“Z” என்பதால் குறிக்கப்படுகின்றது. அதனை இலங்கை நேரத்துக்கு மாற்றுதல் வேண்டும்). செய்மதி மூலம் பதிவான மட்டக்களப்பின் மீதான வானிலை தொடர்பில் ஆராய்கின்ற பொழுது மட்;டக்களப்பு மாவட்டத்திற்கு கிழக்கே உயர் வளிமண்டலத்தில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தை அடர்த்தியான முகல்கூட்டத்தால் ஆக்கிரமித்துள்ளது. இதன் காரணமாக இன்றும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான வானிலை மழையுடன் கூடியதாக அமையும். கரையோரம் சார்ந்து இடையிடையே பலத்த காற்றுக்களை அவதானிக்கலாம். புலத்த காற்று என்பது மணிக்கு 25-40 கிலோ மீற்றருக்கு உட்பட்டதாகவே அமையலாம்.

இவை தவிர ஏனைய பல மூலங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்துப் பார்க்கின்ற வேளையிலும் கூட நிலைமையில் மாற்றம் எதுவும் காணப்படவில்லை. வெப்பநிலை, மழைவீழ்ச்சி அமுக்கம், ஈரப்பதன் ஆகியவற்றை வைத்துப் பார்க்கின்ற வேளை வானிலையின் அசாதாரண நிலைமையையே பிரதிபலிக்கின்றது.

நாளை வானம் சற்று வெளிப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இருந்தாலும் முற்றுமுழுதான சூரிய உதயத்தோடு எதிர்பார்க்க முடியாது இடையிடையே மழை பொழிய வாய்ப்பு உள்ளது. இன்று மாலைவரையான வானிலைத் தரவுகளை ஆராய்ந்ததன் பிற்பாடே தீர்க்கமான முடிவுக்கு வர முடியும். இருந்த போதும் நாளையும் அவதானத்துடன் செயற்படுவது உசிதமானது.

மேலும் எதிர்வரும் 10 நாட்களுக்கான வானிலை எதிர்வு கூறல்களின்படி 1 ஆம் திகதி வரைக்கும் விட்டு விட்டு வானிலைக் குழப்பங்கள் நீடிக்க வாய்ப்புள்ளமையையே காட்டுகின்றது. நான் ஏற்கனவே குறிப்பிடதைப் போன்று வானிலையின் அதிகூடிய நீட்சிக்காலம் ஒரு நாள்தான். ஆதற்கிடையில் பலவதமான வடிவங்களை வளிமண்டலம் எடுக்கும். அடுத்தடுத்த நாளைய மாற்றங்களை உறுதியாகக் கூறுவது சிக்கலானது. இருந்தாலும் 50 சதவீதம் இன்று குறிப்பிடுபவை சார்ந்து நிலைமை அமையும்.

ஆகவே நிலைமைகள் தொடர்ந்து அவதானிக்கப்பட்டு உரிய தருணத்தில் தகவல்களை எதிர்வுகூறக் காத்திருக்கின்றேன். வானிலை தொடர்பில் மக்கள் எவ்விதமான அச்சமும் கொள்ளத் தோவையில்லை. செய்மதிப்படத்தில் திரண்டிருக்கும் முகில்கள் ஒரு தாழமுக்கக் குழப்பமே அன்றி சூறாவளி அல்ல.
தொடர்ந்து இணைந்திருங்கள்.

----------------------------------------------------------------------------------------------------------------
26.12.2014 - செய்மதி மூலமான பிந்திய அவதானங்களின் படி மாலையில் எமது பிரதேசத்துக்கு மேலான தாழமுக்கம் வலுவடைய வாய்ப்புக் காணப்படுகிள்றது. காரணம் உயர் வளிமண்டலத்தில் காற்றானது வட வட-கிழக்கு
(NNE) திசையாக நகர்ந்து செல்வதால் தற்போதுள்ள நிலையிலும் பார்க்க மட்டக்களப்பை அண்டிய கரையோரம் அதிகமான மழை வீழ்ச்சியைப் பெறும். 100 மில்லி மீற்றருக்கும் மேலான மழைவீழ்ச்சியினை எதிர்பார்க்க முடியும். இந்த நிலைமை நாளையும் தொடரும் என்பதையே வளிமண்டல அவதானிப்புக்களில் இருந்து எதிர்வு கூற முடிகின்றது.

மற்றுமொரு தாழமுக்கம் மட்டக்களப்புக்கு கிழக்கே 200 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது இது வடமேற்காக நகர ஆரம்பித்துள்ளது இன்று மாலையின் மிக அண்மித்து நாளையும் மட்டக்களப்பின் மீது நிலைகொள்ளலாம். ஆனாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் எவ்வித பதட்டமுமின்றி வீடுகளில், இடைத்தங்கல் முகாம்களில் இயல்பு வாழ்வைத் தொடர முடியும். காற்றுடன் கூடிய மழைப்பொழிவு காணப்படும். இன்று முதல் வளிமண்டல ஈரப்பதன் 97 சத வீதத்துக்கு மேல் நிலவும் வாய்ப்புள்ளதால் கடுமையாக குளிர் இரவில் நீடிக்கும் முதியவர்கள், குழந்தைகளை அவதானமாகப் பராமரிப்பது ஆரோக்கியமாக அமையும். குறிப்பாக முகிலின் செறிவு கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று தெற்கு, மண்முனை வடக்கு, காத்தான்குடி, மண்முனைப்பற்று ஆகிய பிரதேசங்களில் அதிகரித்துக் காணப்படுகின்றது.

தகவலும் படமும்- கிருபா இராஜரெட்ணம் 
விரிவுரையாளர், புவியியற்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம்,
-------------------------------------------------------------------------------------------------------------
கடந்த இரு நாட்களாக மேல் வளிமண்டலத்தில் காணப்பட்ட வளிமண்டலக் குழப்பமானது தற்போது தாழமுக்கமாக வலுவடைந்து இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் காணப்படுகிறது. இதன் தாக்கத்தினால் நாட்டின் அனேகமான  பகுதிகளில் மழை காணப்படும். இந்த தாழமுக்கமானது நகர்ந்து, பின்னர் இலங்கையை விட்டு அப்பால் சென்றபின்னர் இரு தினங்களில் இந்த மழை கொண்ட காலநிலை படிப்படியாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும் சற்றுப் பலமான காற்று வீசும்.

நாட்டின் அனேகமான பகுதிகள் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பிரதேசங்களில் 150மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்று மணிக்கு 60 கிலோ மீற்றர் முதல் 80 கிலோ மீற்றர் வரை வீசக்கூடும்.

கடல் பிராந்தியங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இலங்கைத்தீவை சுற்றியுள்ள பல பல கடல் பிராந்தியங்களில் மழை காணப்படும். கடல் பிராந்தியங்களில்  காற்றின் வேகமானது மணிக்கு 50 கிலோமீற்றர் முதல் 60 கிலோமீற்றர் வரை காணப்படும். அனேகமான  கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், புத்தளம் முதல் காலி, பொத்துவில் ஊடான காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசுவதனால் இந்தக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் அபாயகரமானதாகவும் காணப்படும்.

க.சூரியகுமாரன், வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கைக்கு மேலாக நகர்ந்து செல்லும் தாழமுக்கம் நேற்று மாலையில் இலங்கையின் மத்தி, தெற்கு, தென் மேற்கு, மேற்குப் பகுதிகளுக்கூடாக கடக்க ஆரம்பித்துள்ளது.  இதன் காரணமாக இப்பிரதேசங்களில் அதிக மழைவீழ்ச்சி இடம்டபெற்றுள்ளது. அதிகூடிய மழைவீழ்ச்சியாக கடந்த 24 மணித்தியலத்திற்குள் 184.4 மில்லி மீற்றர் போவத்தென்ன பகுதியில் பதிவாகியுள்ளது.

நேற்று எதிர்வு கூறியதற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மாலைவேளையில் மாற்றமடைந்த வளிமண்டல நிலைமை காரணமாக காற்றோடு கூடியதான மழைவீழ்ச்சியை ஆங்காங்கே அவதானிக்க முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன் மூலமாக 37.1 மில்லி மீற்றர் மழை இங்கு பதிவாகியுள்ளது. இத்தாழமுக்கம் இன்று தெற்கிலிருந்து வடக்கே இலங்கைக்கு மேலாக நகர்ந்து இந்தியாவின் தென்கரை நோக்கித் திரும்பியுள்ள காரணத்தினால் நாட்டின் பல பாகங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழைப்பொழிவு காணப்படும்.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இன்று அதிகாலை கல்பனா-1 இந்திய வளிமண்டலவியல் செய்மதித் தரவுகளையும்,
METEOSAT-7 செய்மதித் தரவுகளையும் வைத்து ஆராய்கின்ற பொழுது இலங்கைக்கு மேலாக நகர ஆரம்பித்துள்ள தாழமுக்கத்தினால் வானிலை குழப்பமடைவதற்கான சாத்தியப்பாடு உள்ளது. 

நேற்றைய வானிலையுடன் ஒப்பிடுகின்ற பொழுது முகில் கட்டமைப்பு சற்று மாற்றமடைந்து அடர்தியானதாகவும், கீழ் இறங்கியும் காணப்படுகின்றன. இதன் காரணமாக மாவட்டத்தின் சில பகுதிகளில் பலத்த காற்று வீசும் அதேவேளை மாவட்டம் அடங்கலாக கடும்மழை பொழிவதற்கான சாதிதியப்பாடுகள் தென்படுகின்றன. இதனை பின்வரும் செய்மதித் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

முதலாவது படம்

பல பிரதேசங்களில் வெள்ளம் வடிந்து வருகின்ற போதும் நிலைமை வழமைக்குத் திரும்புவதற்கு தாமதம் ஏற்படுவதனால் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் ஓரிரு நாட்கள் அங்கேயே பாதுகாப்பாக இருந்து பராமரிக்கப்படுவதே சிறந்ததாகும். காரணம் அடுத்தடுத்த நாட்களுக்கும் இந்நிலைமை நீடிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதையே எதிர்வரும் 10 நாட்களுக்கான வானிலை முன்னறிவித்தலை நோக்குகின்ற பொழுது புலப்படுகின்றது.

2வது படம்


3வது படம்


இவற்றைக் கவனத்திற்கொண்டு பொறுப்புடன் செயற்படவேண்டிய தேவை உள்ளது. இந்த நாட்களில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படும் அதேவேளை மேற்கு எல்லைப் பிரதேசங்கள், பொலநறுவை, அம்பாறை மாவட்டம் ஆகியவற்றிலும் கணிசமானளவு மழையை எதிர்பார்க்க முடியும். அதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேங்கியுள்ள வெள்ள நீர் வடிவதிலும் தாமதம் ஏற்படும்.
   
இத்தகைய சூழ்நிலைகளில் சூறாவளி தொடர்பாக பீதிகளை ஏற்படுத்தத்தக்க வதந்திகள், ஊர்ஜிதமற்ற கருத்துக்கள் பரப்பப்படுவது இயல்பு. இவ்வாறான பரப்புரைகள் குறித்து மக்கள்  அச்சம்கொள்ளத் தேவையில்லை. சூறாவளியைப் பொறுத்தவரை ஓரிரு மணித்தியாலங்களுக்குள்ளோ அல்லது ஒரு நாளிலோ விருத்தியடைய முடியாது.


குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று அத்தகைய நிலைக்கான சாத்தியப்பாடு சிறிதளவேனும் இல்லை.
தற்பொழுது இலங்கை மீது நிலைகொண்டிருப்பது தாழமுக்கத்தின் காரணமாகத் தோன்றிய 'வளிமண்டலக் குழப்பம்' இது மணிக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் சுழலும்' காற்றையும், கடும் மழையையும் நகரும் பாதையில் தோற்றுவிக்கும்.
 
தொடர்ச்சியான அவதானிப்பின் மூலம் வானிலைத் தகவல்கள் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் காத்திருங்கள். 


கிருபா இராஜரெட்ணம் விரிவுரையாளர், புவியியற்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம்,