வெள்ளம் பற்றி ஊருக்குள் உரையாடப்படும்; கதைகளும்; மக்களின் சுயமான தயார்படுத்தல்களும்




மாரி காலத்தில் மழைபெய்து தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் வருவதும் அது வடிவதும் மக்கள் அது தொடர்பாக விழிப்பாக இருப்பதும் வழமை. இன்றைய காலத்தில் வெள்ளப்பெருக்கு வருவது அதனால் பாதிப்பிற்குள்ளான மக்களுக்கான நிவாரணம் அது மக்களுக்குக் கிடைக்கும் பாங்கு அதனுள் புதைந்துள்ள அரசியல் இத்தியாதிகள்... என இவை ஒரு புறமிருக்க

ஊருக்குள் ஊர்மக்கள் வெள்ளம் பற்றிப் பேசுவதும், அது நடை முறையில் இருப்பதும் மக்கள் அதற்குத் தயாராவதும் இன்னுமொரு வகையாக உள்ளது. இது பற்றி பெரும்பாலும் ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை.


மழை காலத்தில் வெள்ளப் பெருக்குப் பற்றி மூத்தவர்களும் அதில் அனுபவம் வாய்ந்த பெண்கள், ஆண்கள் எனப் பலரும் பல கதைகளைப் பேசத் தொடங்குவர். வெள்ளம் 2011 இல் வருவதற்கு முன்னர் 1987இல்தான் வந்ததாகவும் அது பள்ளமான பகுதிகளில் வந்து உடனடியாக ஓடிவிட்டது எனவும் கூறப்படுகின்றது. அத்தோடு, இன்று வெள்ளம் தாழ் நிலப் பகுதிகளை விட, அதனை அன்டிய சற்று உயர் நிலப் பகுதிகளிலும், முன்னர் வராத இடத்திலும் வருகின்றமை பற்றியும்,  அவ்வாறு வரும் தண்ணீர் உடனே ஓடுதும் இல்லை என்பது பற்றியும், அன்றைய காலத்தை விட இன்றைய காலத்தில் மழை குறைவாக இருந்தும் தண்ணீர் உடனடியாக வடிவதில்லை என்பது பற்றியும் மூத்த பெண்ணொருவர் கூற, அதனை அதன் சுற்றத்தில் உள்ள ஆண்களும், மூத்த பெண்களும் ஆமோதித்தனர். மழை காலத்தில் மட்டக்களப்பில் வழமைபோல், வெள்ளம் தாழ் நிலங்களுக்கு வந்து உடனடியாக ஓடிவிடுதல், அதற்கு மக்கள் தயாராக இருத்தல், மிக இயல்பாகவே இடம்பெற்றுள்ளது.


அண்மைக் காலங்களில், தொட்டம் தொட்மாக (பகுதி பகுதியாக) கொங்கிறீட் பாதைகள் போடப்பட்டுள்ளதாலும் அதனால் நீர் வடிந்தோட முடியாததாலும் தண்ணீர் தேங்கியுள்ளதாக ஊர்மக்கள் தங்களுக்குள் உரையாடுவதையும் அவதானிக்க முடிகின்றது.

அதுமட்டுமன்றி, தங்களது வீடுகள் பதிவாக அத்திவாரமிடப்பட்டுள்ளது எனவும் உயர்த்தப்பட்ட கொங்கிறீட் வீதிகளினால் மழை நீர் வீட்டினுள் புகுத்து தமது உடமைகளை பாதிப்பதாகவும் சந்திக்குச் சந்தி கலந்துரையாடியும் விவாதித்தும் மனதைத் தேற்றிக் கொள்ளும் போக்கும் இச்சூழலில் நிலவுகின்றது.

இன்றைய நவீன அறிவு, துரித வீதி அபிவிருத்தி, பொருத்தமான வடிகால் அமைப்பின்மை என்பவற்றால் குறைவான மழை பெய்யும் காலத்திலும் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து மக்களையும் வாழ்வாதாரத் தொழிலையும் பாதிப்பது தொடர்பானவை பற்றி ஊருக்குள் பேசுவதையும் அறியமுடிகின்றது.

குறிப்பாக, மரக்கறித் தோட்டத் தொழிலாளர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகளான விறகு வெட்டி விற்பவர்கள், சோளன் கச்சான் விற்று அன்றாடம் சம்பாதிப்பவர்கள், கதுரு பொறுக்கி நெல்லைச் சேமிப்பவர்கள், நாட்டு (ஊர்) பசு மாடு, கன்றுகளை வளர்த்து அதனால் வாழ்வாதாரத்தை ஈட்டுபவர்கள், மேசன் ஓடாவி வேலைசெய்பவர்கள், கூலி வேலைசெய்து உழைப்பவர்கள் எனப் பலரும் பாதிக்கப்படுவதும், இவர்களுக்கு ஒரு நாள் வருமானம் இல்லாவிடின் அது அவர்களது அன்றாட உணவைப் பாதிக்கும் என்பதனையும் அறிந்துகொள்வதும் அம்மனிதர் சார்ந்து செயற்படுவதும் அவசியமாகும். இருந்தபோதிலும் அம்மனிதர்கள் தமது பாதிப்புக்கள் பற்றி தமக்குள்ளே மனம் விட்டுப் பேசுக்கொள்வதும் தர்க்கிப்பதும்

அபிவிருத்தியும் அதனுடனான வளர்ச்சிக்கும் இயந்திரமயமாதலை முன்னிறுத்தலும் இடம்பெறுவதானது தனியொருவரின் சட்டைப் பையை நிறப்புவதாகவே உள்ளது.
இடம்பெறுகின்றது. இவர்கள் அன்றாடம் உழைத்தால்தான் தாமும் தமது பிள்ளைகளும் வயிற்றுப் பசியைப் போக்க முடியும்.

 மனிதர் அன்றாடம் சுயதொழிலைச் செய்து சேமித்து வாழ்வதற்கான  நிகழ்ச்சித் திட்டங்களைத் தயாரித்து வலுப்படுத்தும் போக்கும் அது தொடர்பான சிந்தனையும் அவசியமாகும்.

மக்கள் பல வழிகளில் சவால்களைத் தாண்டி சுயமாகத் தொழிலைச் செய்தாலும் அதனைச் சேமித்து மழை, வெள்ள அனர்த்தங்கள் வரும்போது வாழ முடியாத் போக்கே மட்டக்களப்பில் நிலவுகின்றது.

நீர் வடிந்தோடும் வடிகால் பற்றியும் உரையாடல் வழமைபோல் இடம்பெற்றது. ஊருக்குள் இருந்து வரும் மழை நீர் ஒன்றுசேரும் கால்வாய் (இடம்) அகலம் கூடியதாகவும் அது வடிந்து பள்ளத்தில் வீழும் பகுதி அகலம் குறைவாகவும் காணப்படுவதால் நீர்த்தேக்கம் அதிகரித்து வெள்ளம் வீட்டினுள்ளும் வீதிகளிலும் நிறைந்துள்ளமைக்குக் காரணம் எனவும் கூறப்படுகின்றது.

அத்தோடு, மிக முக்கியமான உரையாடலாக விளங்குவது குளத்து நீர் ஊருக்குள் வருவது பற்றியதாகும். காசுக்கு நீர் வினியோகம் செய்வதற்காக முன்னைய காலங்களை விட குளங்கள் மிக ஊயரமாக்கப்பட்டமையும், குளங்களின்  அணைக் கட்டுக்கள் உடைத்துவிடும் என்பதற்காக ஓரே நேரத்தில் குளங்கள் திறந்து விடப்படுவதால் ஊருக்குள் வெள்ளம் வந்து தேங்குவதாகவும் கூறப்படுக்கின்றது. இவ்வேளை, மழைத் தண்ணீர்; ஊர்களில் இருந்து பள்ளத்தினூடாக வெளிச் செல்லும் போது, குளத்துத் தண்ணீர் ஊரைநோக்கி வருவதனால் அதிக வெள்ளம் பெருக்கெடுப்பதாகவும் ஊருக்குள் பேசப்படுகின்றது.

இவ்வாறு வெள்ளப் பெருக்கு இடம்பெறுதல், மழை நீரின் அதிக தேக்கம், அது வழிந்தோட முடியாது காணப்படுகின்றமை தொடர்பான தெளிவு ஊருக்குள் இருப்பதை அவர்களது உரையாடல்கள் மூலம் அறியமுடிகின்றது.

அதேவேளை, ஊர்மக்கள் அந்த வெள்ளப் பெருக்கின் தாக்கத்திலும், மழை காலத்தில் வரும் நீர்த் தேக்கத்திலிருந்து தங்களையும் தக்களது பொருட்களையும் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது பற்றி சுயமாகவே அறிந்து தமக்குரிய தயார்படுத்தல்களையும் பொறிமுறைகளையும் வைத்திருக்கின்றனர். இதனை மூத்த பெண்களும், அவர்களின் கதைகளைக் கேட்டுப் பயிற்றப்பட்ட இளம் யுவதிகளும் தங்களது பாதுகாப்பு நடைமுறைகளைச் சுயமாக மேற்கொள்ளும்போது உணரமுடிந்தது.

மேற் குறிப்பிட்ட பொருத்தமற்ற வெள்ளத் தாக்கத்தினால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இத்தயார்படுத்தல்கள் இயல்பாகவே இடம்பெறுகின்றது.

இதற்காக பெருவாரியாக மிக உயரமான 'சிறாம்பி' அல்லது 'பரன்' கட்டிக்கொள்வர்.  தம்மையும் தமது பிள்ளைகளையும் பொருட்களையும் உடனடியாகவும் நிரந்தரமாகவும் பாதுகாப்பதற்கு இவ்வாறான சிறாம்பி பயன்படுத்தப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.

சிறாம்பி என்பது வயற்செய்கையின் போது வயலைப் பாதுகாப்பதற்காக நிலத்தில் இருந்து 5 அடி உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் சிறிய வீடு ஆகும். ஆனால், வெள்ளத்தில் இருந்து பொருட்களைப் பாதுகாக்க வீட்டிளுள் தண்ணீர் வரும் அளவு மட்டத்தை அறிந்து தமக்கு வசதியாக ஒன்று அல்லது இரண்டு தட்டுக்களில் கட்டிக் கொள்வது வழக்கமாக உள்ளது.

அத்தோடு, சமகாலத்தில் கொங்கிறீட் தட்டுகளும் வீட்டுச் சுவருடன் சேர்த்துக் கட்டி தமது பொருட்களைப் பாதுகாப்பதையும் காணமுடிகின்றது.  சில வேளைகளில் வீட்டு மோடுகளிலும் தமது பொருட்களை சாக்குகளில் கட்டி மூட்டை மூட்டையாகத் தூக்கிவைப்பதையும் அவதானிக்கமுடிகின்றது. இவ்வேளையில் தாமாகவே சுற்றத்தாருடன் ஒன்று சேர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுக்ன்றமை வழக்கமாகும்.

இவ்வாறான சிறாம்பிகளில் ஒன்றரை தொடக்கம் இரண்டு நாள் வரையும் தொடர்ச்சியாக இருப்பர். அதேவேளை நீண்ட நாளைக்குப் பொருட்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் இது உதவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான உயரங்களில் ஏற்றி வைக்கும்போதே அம்மக்களுக்குத் திருப்தி ஏற்படும். இது அம்மக்கள் தாம் திட்டமிட்டு வடிவமைத்த பொறிமுறையாகும். இந்த நுட்பமுறைகளையும் அதன் அறிவாற்றலையும் வலுப்படுத்த வேண்டியது அனைவரது பொறுப்பாகும். ஏனெனில் சுய அறிவு திறன் வெளிப்பாடே நிலையான அபிவிருத்தியைத் தரும்.

எனவே, சமுதாயம் இவ்வாறான அனர்த்தங்களில் இருந்து தம்மையும் தமது உடமைகளையும் பாதுகாப்பதற்கு தமக்கேற்ப சுயமாக பாதுகாப்பு முறைமைகளைக் கைக்கொள்வதை அறியமுடியதோடு,  பொருத்தமற்ற வெள்ள அனர்த்தம் தொடர்பான உரையாடல்களையும் தமக்குள் வைத்திருப்பதையும் அதில் தெளிவு பெற்றுள்ளதையும் அறியலாம். அத்தோடு, வெள்ளம் ஏற்படும் யதார்த்த சூழல் பற்றியறிதல் அதில் மக்கள் தப்பித்துக் கொள்வதற்காக வைத்திருக்கும் சுய அறிவு பற்றித் தெரிதல் அது பற்றி வெளிக்கொண்டு வருதல் என்பனவும் மிக அவசியமாகும். 

(சு.சந்திரகுமார், விரிவுரையாளர், கி.ப.கழகம்)