தாய் மொழிக்கல்வியின் அவசியம்


நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கும் மொழியே தாய் மொழி எனலாம்.
தாய்மொழியானது நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம் வேறுபடுகிறது.
இன்றைய கால கட்டத்தில் தாய் மொழிக் கல்வி என்பது அனைவராலும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால் இதனை இன்று பழைமைவாதமாகவும், குறுகிய கண்ணோட்டத்துடனும் நோக்கப்படுகிறது. உலகமயமாக்கல் நிலவும் இக்கால கட்டத்தில் தாய் மொழியில் கல்வி என்பது தாங்கள் குழந்தைகளுக்கு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்தி  கொடுக்குமோ என்ற கேள்வி பெற்றோர்களிடத்தில் எழுகிறது. இதனால் இன்று நாம் தாய் மொழிக்கல்வியின் அவசியத்தை வலியுறுத்த கடமைப்பட்டுள்ளோம்.

இன்று உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் இந்தியா உள்ளிட்ட ஒரு சில ஆசிய, ஆபிரிக்க நாடுகளைத் தவிற தாய் மொழி மூலமாகவே கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது. மனிதனது சிந்தனைத் திறனுக்கும் தாய் மொழிக்கும் தொடர்பு இருக்கின்றது. தாய் மொழி தான் சிந்திக்கும் திறனின் திறவுகோளாக இருக்கிறது. எந்த மொழியைக்கற்றாலும் எத்தனை மொழிகளைக் கற்றாலும் ஒருவரின் சிந்தனை உருவெடுப்பது தாய் மொழியில் தான். எழுத்து இல்லாத மொழிகள், சிறுபான்மையினர் பேசும் மொழிகள், மொழி வளர்ச்சி அடையாத மொழிகளில் தாய் மொழியில் கல்வி என்பது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது.

முதலில் தாய் மொழியில் கல்வி பயிலும் குழந்தைகளே மிகவும் ஆழமாக கல்வி கற்கின்றனர். மனிதனது படைப்பாற்றலை அதிகப்படுத்துகின்றது. அதே போல் தாய் மொழியில் கல்வி கற்பதன் மூலம் குழந்தைகள் கற்பதைத் தாங்கள் பேசுவதுடன் சமூகத்துடன் ஒப்பிட்டுப்பார்க்க முடியும். கற்கின்ற குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் கற்றுத்தரும் ஆசிரியர்களும் தாங்கள் சொல்ல வருவதை கற்பவருக்கு சரியாக போதிக்க முடிகிறது. இதனால் மாணவர்களின் தன்னம்பிக்கை, பேச்சாற்றல், ஆக்கத்திறன் என்பன அதிகரிக்கின்றன.

மேலும் பிள்ளைகளின் அனுபவங்களுக்கு அர்த்தம் கொடுப்பது தாய் மொழியே ஆகும். மொழியின் இயல்பைப்பற்றி கற்பதற்குக் கூட தாய் மொழி உதவுகிறது. பாடவிதானத்தின் சகல அம்சங்களையும் புரிந்து கொள்வதற்கு மொழியை எவ்வாறு பயன்படுத்துவதென்பதையும் தாய் மொழி புகட்டுகின்றது. கல்வியின் அத்திவாரம் தாய் மொழியே என்றாலும் மற்றொரு தேசிய மொழி, இரண்டாம் மொழி போன்ற மொழிகளைக் கூடவே கற்பதாலும் பல அனுகூலங்கள் உண்டு என்பதில் மறுப்பதற்கிடமில்லை. தொடர்பாடலை விசாலமாக்குவதுடன் பிற்காலத்தில் உயர்கல்வி கற்பதற்கும் தொழில் வாய்ப்புக்கள் பெறுவதற்கும் அது உதவும்.     

மேலைத்தேய அறிஞர்கள் கூட தாய் மொழிக்கல்வியை வலியுறுத்தியுள்ளனர். 'தான் பெற்ற கல்வி சமூகத்துக்கு பயன்பட வேண்டுமெனில், அவன் தாய் மொழியில் கல்வி பெற வேண்டும்' என ஜான் டியுவி மற்றும் விபுலானந்தர் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் காந்தியின் கலைத்திட்டத்தின் படி 'கல்வி என்பது தாய்மொழியாக இருக்க வேண்டும் அந்நிய மொழியில் கல்வி கற்பிக்கும் போது தாய் மொழி தேசப்பற்று என்பன குறைவடையும் எனக் கூறியுள்ளனர். அதே போல் உளவியலாளர்கள் கூறுவது என்னவெனில்; 'தாய் மொழி மூலமாகவே ஒருவர் தான் கூற விரும்பும் கருத்தை தெளிவாகவும்; முழுமையாகவும்; ஆழமாகவும் தெரிவிக்க முடியும்' என்கின்றனர். மேலும் தாய் மொழிக்கல்வி பற்றி ஐ.நா சபையின் யுனெஸ்கோ அமைப்பு பல்லாண்டு காலமாக ஆராய்ச்சி செய்து வருகின்றது. அந்த வகையிலேயே வருடம் தோறும் பெப்ரவரி 21,அனைத்துலக தாய்மொழி தினமாக 2000ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.     

இன்று தமக்குச்சொந்தமில்லாத அந்நிய மொழியில் கல்வி பயிலத்தொடங்கும் பல மில்லியன் பிள்ளைகளுக்கு பாடசாலை அந்நியமான அச்சமூட்டுமிடமாக தோன்றலாம்; 4 அல்லது 5/6 வயதாகும் போது இரண்டாம் மொழியொன்றைக் கற்கும்படி நிர்ப்பந்திக்கப்படும் இப்பிள்ளைகள் கண்ணைக்கட்டி காட்டில் விடப்பட்டவர்கள் போல் திணருகிறார்கள். தமக்கு அந்நியமான ஒரு மொழியைக் கற்கும்போது அம்மொழியின் சொற்றொகுதி, வசனஅமைப்பு, பொருள் என்பன சொந்த மொழியிலும் வேறுபட்டு இருப்பதனால் திண்டாட நேர்கிறது.

பிறப்பிலிருந்தே தாம் பயின்று வந்த மொழி, பாடசாலை மொழிக்குத்தாழ்ந்ததென்றும் அவர்கள் உணரக்கூடும். கணிதம், வாசிப்பு போன்ற சிக்கலான பாடங்களைப் படிக்கும் போது மிகப்பெரிய சவாலை அவர்கள் சமாளிக்க வேண்டும். ஆனாலும் தன் அறிவாற்றலின் அடித்தளமாக விளங்கும் மொழித்திறன் மேற்படி பாடங்களைகக் கற்பதற்கு திடீரென பயனற்றதாகி விடுகின்றது. இந்நிலையில் பல பிள்ளைகள் படிப்பைத் தொடர்வதற்கும் வகுப்பில் முன்னேறுவதற்குத் திண்டாடுவதில் வியப்பில்லை. இன்றைய பெற்றார்களின் ஆடம்பரமும், வசதி வாய்ப்பும் பிள்ளைகளை வேற்று மொழியில் கல்வி கற்க தூண்டுகிறது. எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்து தன் பிள்ளையை வேற்று மொழியில் தான் படிக்க வைப்பேன் என்று அடம்பிடிக்கும் எத்தனை பெற்றார்களால் இன்று அப்பாவிப் பிள்ளைகளின் படிப்பு இடையில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் நிறையப்பேர் பாதிக்கப்பட்டுள்ளதை  சமூகத்தில் கண்கூடாகக் காணலாம். இவையணைத்துக்கும் முறையான வழிகாட்டல் அவசியமாகும்.

இவ்வாறு பார்க்கையில் பள்ளி செல்லாதிருக்கும் 130மில்லியனுக்கும் அதிகமான பிள்ளைகளை அனுகுவதற்கும், படிப்பில் அவர்களை இணைத்துக்கொண்டு வெற்றி பெறச்செய்வதற்கும் ஆரம்பத்திலேயே தாய் மொழியை உபயோகிப்பது சிறந்ததாகும். எனவே தாய் மொழியின் அவசியத்தை அனைவரும் உணர்ந்து அதனைப் பேணிப்பாதுகாக்க முயற்சிப்பதோடு தாய் மொழிக்கல்வியே எல்லாக்கல்விக்கும் அடித்தளம் என்பதையும் அதன் மூலம் பல மொழிகளையும் எளிமையாக அறிந்து கொள்ளலாம் என்பதையும் அனைவரும் உணர வேண்டும். தாய் மொழியில் புத்தகங்கள் இருக்க வேண்டும், இவற்றைப்படித்துப் பயன்படுத்த வேண்டும். இல்லையேல், இவ்வுலகிலுள்ள 6000 மொழிகளில் 50% ஆனவை இந்நூற்றாண்டின் இறுதிக்குள் காணாமல் போய் விடும்.

மொழி என்பது ஒரு பண்பாட்டின் சின்னம் என்பதை யாவரும் உணர்ந்தாலே தாய் மொழியை அழிவிலிருந்து காக்கலாம். தாய்; மொழியை பயன்படுத்தும் இறுதி தலைமுறையினர் நாமாக இருந்து விடாமல் எதிர்வரும் சந்ததிகளுக்கும் தாய்மொழியின் அவசியத்தை எடுத்துக்கூறுவதோடு; தாய்மொழியை அழிவிலிருந்நு காப்பதற்கு எம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோம்.

M.M.F.MIFASA.
2ND YEAR.
DEPARTMENT OF   EDUCATION.                                                                                       UNIVERSITY OF EASTERN.