சுவிட்சர்லாந்தில் நெருக்கடியை சந்தித்துள்ள 13 விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்! 5 வருட சிறைத்தண்டனை ?

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 13 பேருக்கு சுவிட்சர்லாந்தில் 5 வருடம் சிறைத்தண்டனை விதிக்குமாறு கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் 13 பேருக்கு 5 வருட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்குமாறு சுவிஸ் சட்டமா அதிபர் சுவிஸ் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவிஸ் சட்டமா அதிபர் இந்த கோரிக்கையை விடுப்பதற்கு முன்னர் குறித்த 13 பேருக்கு எதிரான வழக்கை நீக்கி கொள்ளுமாறு புலம்பெயர் தமிழர்கள் நீதிமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் சுவிஸ் சட்டமா அதிபர் அது தொடர்பில் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகின்றது.

இவர்கள் விடுதலைப் புலிகளின் உதவியாளர்கள் என நீதிமன்றத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். சுவிஸ் வங்கிகளில் 12.5 மில்லியன் டொலர் பணத்தை கடனாக பெற்று டுபாய் மற்றும் சிங்கப்பூருக்கு அனுப்பியுள்ளதுடன் அந்த பணம் விடுதலை புலிகளுக்கு ஆயுதம் வழங்குவதற்காக செலவிடப்பட்டுள்ளதாக சுவிஸ் காவல்த்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.