மட்டக்களப்பில் 12 இடங்களில் திறக்கப்பட்ட ஒரு மாதத்திற்கான விசேட பொலிஸ் நடமாடும் சேவை!
இலங்கை பொலிஸ் மா அதிபரின் சிந்தனைக்கு அமைவாக சமூக சேவைகளுக்காக நாடளாவிய ரீதியில் அணைத்து பொலிஸ் பிரிவுகளிலும் ஒரு மாதத்திற்கான விசேட பொலிஸ் காவல் அரண்கள் (நடமாடும் சேவை) திறந்து வைக்கப்பட்டுவருகின்றன.
இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 பொலிஸ் பிரிவுகளிலும் ஒரு மாதத்திற்கான பொலிஸ் நடமாடும் சேவை (பொலிஸ் காவல் அரண்கள்) செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட இருதயபுரம் கிழக்கு ஜெயந்திபுரம் பௌத்த விகாரையில் மக்கள் ஒன்று கூடும் மண்டபத்தில் கிராமத்துக்கு பொலிஸ் எனும் தலைப்பின் கீழ் ஒரு மாதத்திற்கான பொலிஸ் நடமாடும் சேவை (பொலிஸ் காவல் அரண்) மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி எல்.ஆர்.குமாரசிறியால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த பொலிஸ் நடமாடும் சேவை காவலரணை திறந்து வைத்து உரையாற்றிய போது மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறி தெரிவிக்கையில் இலங்கை பொலிஸ்மா அதிபரின்ஆலோசனைக்கு அமைவாகவும் பொதுமக்களும் பொலிசாரும் ஒன்றிணைந்த சமூகத்தில் சிறந்த நல்லுறவையும் சிறந்த சமூக செயல்பாட்டையும் கொண்டு செல்லும் நோக்கில் இந்த பொலிஸ் நடமாடும் சேவை (பொலிஸ் காவல் அரண்கள்) நாடளாவிய ரீதியில் வைக்கப்பட்டது.
இவ்வாறு இந்த பொலிஸ் நடமாடும் சேவை காவல் அரண்கள் திறந்து வைக்கப்பட்ட போதிலும் பொதுமக்களின் ஆதரவும் அர்பணிப்பும் இல்லாமல் இதனை செயல்படுத்த முடியாது.
எனவே இந்த காலப்பகுதியில் இந்த பகுதியில் இடம்பெறுகின்ற குற்ற செயல்களை குறைந்த அளவு கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் பொலிசாருக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி இப்பகுதியில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்களை தடுக்க வழிசெய்வோம் என தெரிவித்துகொண்டார்.
மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தீகா வதுற ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மத தலைவர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.