செங்கலடியில் இரவு வேளையில் மரக்குற்றிகளைக் கடத்திய நபர்களுக்கு நடந்த விபரிதம் !


செங்கலடி,  கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காயங்குடா பிரதேசத்தில் சட்டவிரோதமாக தேக்குமர குற்றிகளை ஏற்றிவந்த 3 பேரை கைது செய்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றதுடன், உழவு இயந்திரமொன்றையும், ஒரு தொகுதி மரக்குற்றிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொலிசாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இரவு 8 மணியளவில் குறித்த பிரதேசத்தில் கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.சமரக்கோன் தலைமையிலான பொலிஸ்குழு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டது.

இதன்போது காட்டில் இருந்து சட்டவிரோதமாக தேக்குமரங்களை வெட்டி அதன் குற்றிகளை உழவு இயந்திரத்தில் எடுத்து வந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் கொம்மாந்துறையைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.