மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் சித்தாண்டிப் பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த நபர், பிரதான வீதியால் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது தூரப் பிரதேச போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்தில் மோதுண்டுள்ளார்.
படுகாயமடைந்த அவரை, சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தபோதும், ஏற்கெனவே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் சித்தாண்டி, உதயன்மூலை மதுரங்காட்டுக் கொலனியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான பொன்னம்பலம் தியாகராசா (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதியைக் கைது செய்துள்ள ஏறாவூர் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.