மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருட்களின் பாவனை மற்றும் விற்பனை குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன.
இதன்படி, கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் போதைப்பொருட்களை வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டில் 160 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மதுவரித் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி நிக்சன் அவுஸ்கோன் தெரிவித்தார்.
இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான காலப் பகுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கசிப்பு உற்பத்தி, சட்டவிரோத மதுபானம், கஞ்சா, கோடா மற்றும் கசிப்பு தயாரிக்கப் பயன்படுத்தும் உபகரணங்கள் என்பவற்றுடனேயே இவர்கள் கைதாகியுள்ளனர் எனவும் மதுவரித் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
வவுணதீவு, வாகரை மற்றும் கொக்கட்டிச்சோலை உட்பட பல பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையை மாவட்ட மதுவரித் திணைக்களம் தொடர்ந்தும் மேற்கொணடு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.