பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் சேவை 4 ஆவது தடவையாக நீடிப்பை அரசியலமைப்பு பேரவை நிராகரிப்பு!



பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நான்காவது சேவை கால நீடிப்பை அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளது.

இலங்கையின் 35ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன 2020ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார். பொலிஸ்மா அதிபரின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதியுடன் நிறைவு பெற்றது.

புதிய பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் அரசியலமைப்பு பேரவை ஊடாக தீர்மானம் எடுப்பது இழுபறி நிலை காணப்பட்டபோது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் பொலிஸ்மா அதிபரின் சேவை நீடிப்பு காலத்தை மூன்று தடவைகள் நீடித்தார்.

பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்ட மூன்றாவது சேவை நீடிப்பு நிறைவடைந்த நிலையில் மேலும் நீடிப்பதற்கு ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளது.