53 மசாஜ் நிலையங்கள் மூடப்பட்டன !


நீர்கொழும்பு பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதிகளில் பணிபுரிந்து வந்த 2 பெண்களுக்கு HIV எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தலதுவ இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

இந்தச் சோதனையின் போது 53 மசாஜ் நிலையங்கள் மூடப்பட்டு அதில் பணிபுரிந்த 137 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,
”கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீர்கொழும்பு, கொச்சிக்கடை மற்றும் சீதுவ பொலிஸ் பிரிவுகளில் விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டன . சட்டவிரோதமான முறையில் விபச்சார விடுதிகள் நடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. குற்றச்சாட்டின் கீழ் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்”.

“இவ்வாறு நடத்தப்பட்ட 53 க்கும் மேற்பட்ட மசாஜ் நிலையங்களை முற்றாக மூடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 8 ஆண்களும் 137 பெண்களும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட பெண்களில் இருவருக்கு HIV எய்ட்ஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. எச்.ஐ.வி., சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சந்தேகத்திற்கிடமான இடங்கள் சிறப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும்.” என குறிப்பிட்டார்.