ஓட்டமாவடியில் தனிநபர் கவனயீர்ப்பு போராட்டம் !


ஓட்டமாவடி சுற்றுவட்டத்தை அண்மித்துள்ள புகையிரத கடவைக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை (26) தனிநபர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டார்.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பொதுச் சந்தையை கடக்கும் புகையிரத கடவை நீண்ட காலமாக சேதமடைந்து காணப்படுகிறது.

அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுத்து சீர்செய்து தரவேண்டும் என்றே அந்நபர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

"ஊருக்கு சொந்தமான பிரதேச செயலாளர் உண்டு" ஊரின் அக்கறையில் கவனம் செலுத்தும் சமூக நலன் விரும்பிகள் உண்டு. எத்தனையோ காலமாக இந்த இடம் சேதமடைந்துள்ளது. இதனால் பல நூறு பேர்கள் பயணிக்கும் முக்கியமான ஓர் இடம்.

இதை சீர் செய்ய பலரிடம் பேசியும் பலனளிக்கவில்லை. இது ஏன் எந்த ஒரு அதிகாரியின் கண்ணுக்கும் படவில்லை.

இதை சீர்செய்ய அனுமதி தாருங்கள். இல்லா விட்டால் இதை சீர்செய்து தாருங்கள் அன்புள்ள அதிகாரிகளே! என எழுதப்பட்ட பதாதையை கழுத்தில் தொங்கவிட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.