கால்வாயொன்றில் தவறி விழுந்து நீரில் அடித்து செல்லப்பட்ட குழந்தை உயிரிழப்பு !


பொலன்னறுவை, வெலிகந்த பகுதியில் கால்வாயொன்றில் தவறி விழுந்த குழந்தையொன்று சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரம் நீரில் அடித்து செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (26) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் வெலிகந்த பகுதியை சேர்ந்த இரண்டு வயது ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குழந்தையின் தாய் நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காகக் குழந்தையை மூத்த மகளிடம் ஒப்படைத்துள்ளார். இதன்போது குழந்தை வீட்டின் பின்புறமுள்ள வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அருகிலிருந்த கால்வாயில் தவறி வீழ்ந்து நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

இதனைக் கண்ட வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் உள்ள தனியார் நெல் ஆலையொன்றின் ஊழியர் ஒருவராலும் அங்குள்ள சிலராலும், குழந்தை மீட்கப்பட்டு அவசர அம்பியூலன்ஸ் சேவை மூலம் குழந்தையை வெலிகந்த வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர், வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது குழந்தை உயிரிழந்துள்ளதாகவும், குழந்தையின் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தை நீரில் அடித்து செல்லப்பட்ட வேளை, குழந்தையின் தந்தை தோட்டத்திற்குப் பின்புறம் உள்ள மாட்டுப் பண்ணையிலிருந்ததாகவும் மூத்த சகோதரி சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.