வரவு - செலவு திட்டம் ஜனவரி அல்லது பெப்ரவரியிலேயே சமர்ப்பிக்கப்படும் - ஜனாதிபதி !


சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஜூனில் இலங்கை வரவுள்ளது. அவர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததன் பின்னர் அந்த திட்டம் 2025 வரவு செலவுத் திட்டத்துடன் நடைமுறைப்படுத்தப்படும். தேர்தல் நடத்தப்பட இருப்பதால் ஜனவரி அல்லது பெப்ரவரியில் வரவு - செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பத்தரமுல்ல அக்குரேகொட, பாதுகாப்பு அமைச்சு வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் தலைமையக வளாகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டைப் பொறுப்பேற்ற பின்னர் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே தனது முதல் பணியாக இருந்தது. எதிர்வரும் நான்கைந்து வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்துக்காக எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களை விரைவாக எடுக்க வேண்டியிருந்தது. நாடு தற்போது பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்டு வருகிறது. வங்குரோத்து நிலையில் இருந்து முழுமையாக விடுபடுவது தொடர்பாக கடன் வழங்கிய நாடுகளுடன் இப்போது பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகளை சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில், பாதுகாப்பு விசேட ஏற்பாடுகள் சட்டத்தை சமர்ப்பிக்கவும் தேசிய பாதுகாப்பு சபையை சட்டபூர்வமாக்குவதற்கும் ஆயுதப்படை குழுவை நியமிப்பதற்கும் எதிர்பார்க்கின்றோம். அத்துடன், ஓய்வுபெற்ற பாதுகாப்புப் படை வீரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த புதிய வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படும். ஆயுதப் படையில் ஈடுபடுபவர்கள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு போர் தந்திரங்களை கற்பதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் இலங்கை மூலோபாய கற்கைகள் நிறுவகத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் நாம் இன்னும் கஷ்டமான நிலையில் தான் இருக்கிறோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அந்த நிலையில் இருந்து மீண்டு வரக்கூடிய திறன் எங்களிடம் உள்ளது. படைவீரர் கிராமங்களில் வாழும் படைவீரர்களுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் உறுமய தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் நிரந்தர காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கு ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் மற்றும் காணி ஆணையாளர் ஆகியோர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இப்பணிகள் இந்த ஜூலை மாதத்திற்குள் நிறைவு பெறும் என்பதில் எந்த சந்தேகமில்லை. இன்னுமொரு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் பின்னர் தான் நாம் இந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். நாட்டின் ஒற்றுமைக்கு பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதாரச் வீழ்ச்சி, நாட்டின் ஒற்றுமைக்கு மற்றொரு அச்சுறுத்தலாக மாறியது. இந்நிலை நீடித்தால் நமது நாடு பொருளாதாரம் இல்லாத நாடாக அதாவது இன்னொரு லிபியாவாக மாறிவிடும்.

போரின் போது, போரை இழுத்தடிப்பது நல்லதல்ல, அதை தந்திரமாக முடிக்க வேண்டும். போரிலும், பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதிலும் அதற்கேற்ப செயல்பட வேண்டும். நமது நாடு தற்போது பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்டு வருகிறது. வங்குரோத்து நிலையில் இருந்து முழுமையாக விடுபடுவது தொடர்பாக எங்களுக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அந்தக் குழுவும் சீனாவும் எங்களின் முன்மொழிவுகளை ஏற்கத் தயாராக உள்ளன. சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்பிறகு அந்த நாடுகளுடன் தனித்தனி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

மேலும் தனியார் கடன் வழங்குபவர்கள் மற்றும் வங்கிகள், ஓய்வூதிய நிதியம் இவை அனைத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு உடன்பாட்டுக்கு வர வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் எங்களிடம் இருப்பதால் எங்களுக்கு தொடர்ந்து செல்ல முடியும். ஜூன் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இந்த நாட்டிற்கு வந்ததன் பின்னர் அது குறித்து கலந்துரையாடுவோம். பின்னர் இந்த திட்டம் 2025 வரவு செலவுத் திட்டத்துடன் நடைமுறைப்படுத்தப்படும். தேர்தல் நடத்தப்பட இருப்பதால் ஜனவரி அல்லது பெப்ரவரியில் வரவு - செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இவ்வாறான செயற்பாடுகளினால் ஏற்படும் பொருளாதார அபிவிருத்தி மூலம் மக்களின் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்றார்.