ஈக்களின் அதிகரிப்பால் வயிற்றுப்போக்கு, வைரஸ் தொற்றுக்காய்ச்சல் ஏற்படும் அபாயம் : விசேட வைத்திய நிபுணர் !


நாட்டில் வெள்ள நீர் வடிந்து வருவதால் ஈக்களின் பெருக்கம் அதிகரித்து வயிற்றுப்போக்கு மற்றும் வைரஸ் தொற்றுக் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஏராளமான கரிமப் பொருட்கள் இருப்பது ஈ முட்டைகள் முதிர்ச்சியடைவதை துரிதப்படுத்துவதுடன், வெள்ள நீர் குறையும்போது ஈக்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரிக்க வழிவகுக்கிறது.

புதிதாக குஞ்சு பொரித்த இந்த ஈக்கள், உணவு ஆதாரங்களைத் தேடி, அடிக்கடி மலம், குப்பைகள் மற்றும் அசுத்தமான பரப்புகளை நோக்கி சென்று சுகாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத்துகின்றன.

ஈக்கள் அதிகரிப்பதன் விளைவுகள் பயங்கரமானவை என்பதுடன், வயிற்றுப்போக்கு நோய்கள் மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு காரணமான பற்றீரியா மற்றும் வைரஸ்கள் உள்ளிட்ட நோய்க்கிருமிகளை ஈக்கள் காவி கொண்டு வருகின்றன என அவர் சுட்டிக்காட்டினார்.

"அசுத்தமான உணவு மற்றும் நீரை உட்கொண்டால், வயிற்று வலி, பிடிப்புகள், குமட்டல் மற்றும் தளர்வான மலம் உள்ளிட்ட பல அறிகுறிகளுக்கு வழிவகுக்கும்" என தெரிவித்துள்ளார்.

மேலும், காய்ச்சல், தலைவலி மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகளால் வகைப்படுத்தப்படும் வைரஸ் தொற்றுக் காய்ச்சலின் அபாயமும் ஈக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் அதிகரிக்கிறது என்றார்.

எனவே, ஈக்கள் பெருகுவதை எதிர்த்தும், அதனுடன் தொடர்புடைய சுகாதார அபாயங்களைக் குறைப்பதற்கும், குப்பைகளை அகற்றுவதற்கும், சுத்தமாக நீர் ஆதாரங்களைப் பராமரிப்பதற்கும் முடக்கூடிய கொள்கலன்களைப் பயன்படுத்துமாறு மக்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.

உடனடி மருத்துவ கவனிப்பு நோய் பரவுவதைத் தணிக்கவும், பாதிக்கப்பட்ட நபர்களிடையே அறிகுறிகளின் தீவிரத்தைத் தணிக்கவும் உதவும் என எடுத்துரைத்தார்.