பிராந்தியத்தின் பாதுகாப்பு, அமைதியை உறுதிப்படுத்த பயங்கரவாத ஒழிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்க தயார் - அரசாங்கம்




அரசாங்கம் ஆரம்பத்திலிருந்து பின்பற்றும் நிலைப்பாட்டுக்கமைய இந்து சமுத்திரத்தில் பூகோள மோதல்களில் நாம் தலையிடப் போவதில்லை. எனவே எமது இறையாண்மையைப் பாதுகாத்துக் கொண்டு நாம் அணிசேரா கொள்கைக்கமைய செயற்படுவோம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பிராந்தியத்தினதும் மக்களினதும் பாதுகாப்பையும் பிராந்தியத்தின் அமைதியையும் உறுதிப்படுத்துவதற்காக பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான எந்தவொரு செயற்பாட்டுக்கும் ஒத்துழைப்பு வழங்க இலங்கை தயாராக இருப்பதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

வியாழக்கிழமை (8) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்தியா - பாக்கிஸ்தானுக்கிடையில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு உன்னிப்பாக அவதானித்து அரசாங்கத்துக்கு தகவல்களை வழங்கிவருகிறது. அரசாங்கம் ஆரம்பத்திலிருந்து பின்பற்றும் நிலைப்பாட்டுக்கமைய இந்து சமுத்திரத்தில் பூகோள மோதல்களில் நாம் தலையிடப் போவதில்லை. எனவே எமது இறையான்மையைப் பாதுகாத்துக் கொண்டு நாம் அணிசேரா கொள்கைக்கமைய செயற்படுவோம்.

எந்தவகையிலும் நாம் பயங்கரவாத செயற்பாடுகளை அனுமதிக்கப் போவதில்லை. அதற்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதுமில்லை. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் சகல நடவடிக்கைகளுக்கும் எம்மால் முடிந்த ஒத்துழைப்பினை வழங்குவோம்.

பிராந்தியத்தினதும் மக்களினதும் பாதுகாப்பும், பிராந்தியத்தின் அமைதியுமே எமக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்போம். இந்த மோதல் நிலைமையின் எதிர்கால போக்கிற்கு அமைய உரிய தீர்மானங்கள் எடுக்கப்படும்.

இந்த மோதல்கள் இந்து சமுத்திர மற்றும் தென்னாசிய அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும் என்பது குறித்து அவதானம் செலுத்தி வருகின்றோம். அதேபோன்று ஏனைய பகுதிகளில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைவரங்கள் எவ்வாறு இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும் என்பதும் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. நிதி அமைச்சு, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

பிராந்திய அரசுகள் என்ற ரீதியில் இந்தியா, பாக்கிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே எமக்கு உதவிகள் செய்திருக்கின்றன. எதிர்காலத்திலும் உதவிகளை செய்யவுள்ளன.

எனவே இவ்விரு நாடுகளுடனும் சிறந்த இராஜதந்திர உறவுகளைப் பேணுவோம். சில பிரச்சினைகள் அவர்களுக்கிடையில் தீர்த்துக் கொள்ள வேண்டியவையாகும். எங்கிருந்து தோற்றம் பெற்றாலும் பயங்கரவாதத்துக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்ப போவதில்லை.

ஒரு நாட்டுக்கு எதிராக எமது நிலப்பரப்பு, நீர்பரப்பு மற்றும் வான் பரப்பினைப் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்ற நிலைப்பாட்டில் ஸ்திரமாகவுள்ளோம்.

யுத்த நிலைமைகளைக் குறைத்து பிராந்தியத்தின் அமைதியைப் பாதுகாப்பதற்கும், பயங்கரவாத்தை ஒழிப்பதற்கும் நடவடடிக்கை எடுப்பதே எமது கடமையாகும் என்றார்.