சிவனொளிபாதமலை செல்லும் வீதிக்கு 10 நாட்களுக்கு பூட்டு



கினிகத்தேன, தியகல ஊடாக நோர்டன் பிரிட்ஜில் இருந்து சிவனொளிபாதமலை வரையிலான பாதை அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக 10 நாட்களுக்கு மூடப்படும் என்று வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
 
பாலமொன்று இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால், புதிய பாலமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளதால் குறித்த வீதி இவ்வாறு மூடப்படவுள்ளது.

அதன்படி, இன்று (14) முதல் ஜூன் 24 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு வீதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வீதி மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில் கொழும்பிலிருந்து பயணிக்கும் சாரதிகள் கலுகல, பொல்பிட்டிய, லக்ஷபான ஊடாக நோட்டன் பிரிட்ஜ் வீதி மற்றும் ஹட்டன் - நோர்டன் பிரிட்ஜ் வீதியைப் பயன்படுத்துமாறு நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட வீதியின் லொனக் தோட்ட பகுதியில் களனி கங்கைக்கு நீர் பாயும் கால்வாயின் மீது கட்டப்பட்ட பாலம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளதாலும், பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழும் அபாயம் உள்ளதாலும் புதிய பாலம் கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பாலம் 4 ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும், தொடர்ந்து மழை பெய்து வருவதால், பாலம் முற்றிலுமாக இடிந்து விழும் அபாயம் இருப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.