யாழ். செம்பியன்பற்று கடற்கரையில் மீனவர்கள் இடையே முறுகல் நிலை!


யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே இன்று (6) முறுகல் நிலை ஏற்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று சென் பிலிப்நேரியார் கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் பொதுச்சபை செம்பியன் பற்று பகுதியில் உழவு இயந்திரத்தை பயன்படுத்தி கரைவலை தொழில் செய்வது முற்றாக தடை செய்வதாக ஒரு தீர்மானத்தை இந்த ஆண்டு நிறைவேற்றியது.

இந்த தீர்மானத்திற்கு பின்பு அப்பிரதேசத்தில் உழவு இயந்திரத்தை பாவித்து கரவலை தொழில் செய்து வந்தவர்களை அதிகாரிகளின் உதவியுடன் சென் பிலிப்நேரியார் கடற்தொழிலாளர் சங்க நிர்வாகம் அகற்றிவந்தனர்.

இந்நிலையில், சில நாட்களாக செம்பியன் பற்று கடல் பிரதேசத்தில் சிலர் உழவு இயந்திரத்தை கொண்டு மீண்டும் கரைவலை தொழில் மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

இதன் அடிப்படையில் கடற்தொழிலாளர் சங்க நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் பொலிஸார், நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளுடன் குறித்த கரவலைவாடிகளுக்கு இன்று விஜயம் செய்தனர்.

இதன்போது ஆவணங்களை பரிசோதித்த கடற்தொழில் பரிசோதகர், முறையான அனுமதி பெறவில்லை என்பதனை சுட்டிக்காட்டியதுடன் கடற்தொழில் சங்கத்தின் தீர்மானத்துக்கு அமைய உடனடியாக குறித்த இடத்திலிருந்து வெளியேறுமாறு பணித்ததுடன் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்ய முடியாதென தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, இந்த பிரதேசத்தில் உழவு இயந்திரம் பாவித்து சட்டவிரோதமாக தொழில் செய்தால் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலை ஏற்படும் எனவும் அந்தப் பரிசோதகர் எச்சரித்தார்.

உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதால் சிறு தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் கடல் தாவரங்கள் அழிந்துவருவதாக அப்பகுதி மீனவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கரைவலை தொழிலாளர் ஒருவர் கூறுகையில்,

கடந்த ஐந்து வருடங்களாக செம்பியன் பற்று பகுதியில் இதே கடல் தொழிலாளர் சங்க நிர்வாகம் எங்களை உழவு இயந்திரம் பாவித்து தொழில் செய்ய அனுமதித்தார்கள்.

ஆனால், திடீரென்று இந்த வருடம் உழவு இயந்திரத்தை பாவித்து தொழில் செய்ய வேண்டாம். இதனால் பாதிப்பு என்று கூறுகிறார்கள். அப்படியென்றால், கடந்த ஐந்து வருடங்களாக ஏன் எங்களை அனுமதித்தார்கள்?

கடந்த வருடங்கள் எங்களிடம் கையூட்டல்களை வாங்கிச் சென்றவர்கள் இந்த வருடம் நாங்கள் அதைக் கொடுக்கவில்லை என்பதனால் போலியான விம்பத்தை உருவாக்கி குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.

கடற்றொழிலுடன் சம்பந்தம் இல்லாத நபர்களை கூட்டிக்கொண்டு சென்று ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

எமது கரைவலை தொழிலை நம்பி பல குடும்பங்கள் இருக்கின்றன. மனித வலுவை பயன்படுத்தி கரைவலை தொழில் செய்ய முடியாத சூழ்நிலை இருக்கிறது.

ஆகவேதான், உழவு இயந்திரத்தை பாவித்து கரைவலை தொழில் செய்து வருகிறோம்.

உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வது வடமராட்சி கிழக்கில் செம்பியன் பற்று பகுதியில் மட்டுமல்ல, வடமராட்சி கிழக்கின் அதிகளவான பகுதிகளில் உழவு இயந்திரம் பாவித்து தான் தொழில் செய்து வருகிறார்கள்.

இலங்கையில் சட்டம் எல்லோருக்கும் பொதுவாக இருக்கவேண்டும். ஒரு கிராமத்துக்கு ஒரு சட்டம் என்றால் அதை எவ்வாறு நாம் ஏற்றுக்கொள்வது?

நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் கூறியது போன்று நாங்கள் உரிய முறையில் அனுமதி எடுத்து உழவு இயந்திரம் பாவித்து மீண்டும் கரைவலை தொழில் செய்வோம் என தெரிவித்தார்.