பட்டப் பகலில் ஐந்து இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகை திருட்டு !


பதுளை - லுணுகலை அத்தனகொல்ல பகுதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் நேற்று திங்கட்கிழமை (23) மதியம் திருடர்கள் நுழைந்து, சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டரை பவுண் தங்க நகையை திருடிச் சென்றுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் உரிமையாளர் நேற்று காலை தனது வேலைக்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

அதற்குப் பிறகு, அவரது மனைவியும் மதியம் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ள நிலையில், இருவரும் மாலை 3 மணியளவில் வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் வீட்டை பரிசோதித்த போது, தங்க நகை காணாமல் போனது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தனர்.

முறைப்பாட்டின் அடிப்படையில், லுணுகலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் லுணுகலை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.